Press "Enter" to skip to content

அன்றே கணித்தார் சூர்யா… ‘சிங்கம் 2’ பட நடிகர் அதிரடி கைது

பெங்களூருவில் போதைப்பொருள் விற்பனை செய்ததாக சிங்கம்-2 படத்தில் நடித்த நடிகர் போலீசாரால் கைது செய்யப்பட்டு உள்ளார்.

பெங்களூருவில் போதைப்பொருட்கள் விற்பனையில் ஈடுபடும் கும்பலை பிடிக்க காவல் துறையினர் தீவிரம் காட்டி வருகின்றனர். இந்த நிலையில், பெங்களூரு கிழக்கு மண்டலத்தில் உள்ள கே.ஜி.ஹள்ளி பகுதியில் போதைப்பொருட்களை விற்பனை செய்ய வெளிநாட்டு வாலிபர் முயற்சிப்பதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனே காவல் துறையினர் அங்கு விரைந்து சென்றனர்.

இதையடுத்து, அங்கு விரைந்த காவல் துறையினர் சந்தேகப்படும் படியாக சுற்றிய நைஜீரியாவை சேர்ந்த செக்வூம் மால்வின் (வயது 45) என்பவரை கைது செய்தார்கள். பின்னர் அவரிடம் நடத்திய விசாரணையில் மேலும் பரபரப்பு தகவல்கள் வெளியானது.

அதாவது கைதான மால்வின் தமிழ், கன்னடம், மலையாளம், இந்தி உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக தமிழில் சூர்யா நடிப்பில் வெளியான சிங்கம்-2 படத்தில் நடித்திருந்தார். அப்படத்திலும் போதைப் பொருள் கடத்தி வருபவராக நடித்திருந்தார் மால்வின். அவரை சூர்யா கைது செய்வது போன்ற காட்சியும் அப்படத்தில் இடம்பெற்றிருந்தது. 

செக்வூம் மால்வின்

இந்நிலையில், தற்போது நிஜத்திலும் அவ்வாறே நடந்துள்ளதால், ‘அன்றே கணித்தார் சூர்யா’ என சமூக வலைதளங்களில் பல்வேறு மீம்ஸ்கள் பகிரப்பட்டு வருகின்றன. கைதான மால்வினிடம் இருந்து ரூ.8 லட்சம் மதிப்பிலான போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டது. அவர் மீது கே.ஜி.ஹள்ளி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :

[embedded content]

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »