இயக்குனர் ராம் இயக்கத்தில் நிவின் பாலி நடிக்கும் புதிய படத்தை மாநாடு பட தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தயாரிக்கிறார்.
ஜீவா, அஞ்சலி நடிப்பில் கடந்த 2007-ம் ஆண்டு வெளியான ‘கற்றது தமிழ்’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் ராம். இதையடுத்து தங்கமீன்கள், தரமணி, பேரன்பு என வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை இயக்கி முன்னணி இயக்குனராக உயர்ந்தார். குறிப்பாக இவர் இயக்கத்தில் 2013-ம் ஆண்டு வெளியான ‘தங்கமீன்கள்’ திரைப்படம் 3 தேசிய விருதுகளை வென்றது.
இவர் அடுத்ததாக இயக்க உள்ள படம் குறித்த அறிவிப்பு கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியானது. அதன்படி அப்படத்தில் மலையாள நடிகர் நிவின் பாலி கதாநாயகனாகவும், அவருக்கு ஜோடியாக அஞ்சலியும் நடிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க உள்ளதாகவும் அறிவித்திருந்தனர்.
இந்நிலையில், ராம் – நிவின் பாலி கூட்டணியில் உருவாகும் புதிய படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கி உள்ளது. இதில் படக்குழுவினர் கலந்து கொண்டனர். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு தனுஷ்கோடியில் நடைபெற்று வருகிறது. இப்படத்தை மாநாடு பட தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தயாரிக்கிறார்.
[embedded content]
Source: Malai Malar