முதல் அமைச்சர் ஸ்டாலின் குறித்து அவதூறாக பேசி ஒலிநாடா பதிவிட்டதாக பதிவான நடிகை மீரா மிதுன் வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி காட்டியுள்ளது.
நடிகை மீரா மிதுன் நடித்த ‘பேயை கானோம்’ என்ற படத்தின் பெயரில் உருவாக்கப்பட்ட வாட்ஸ் அப் குழு ஒன்றில் கடந்த மார்ச் 16 ஆம் தேதி தயாரிப்பாளர் சுருளிவேல், இயக்குனர் மற்றும் முதல் அமைச்சர் குறித்து ஆபாசமாக பேசி ஒலிநாடா பதிவிட்டதாக தயாரிப்பாளர் சுருளிவேல் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் மீரா மிதுன் மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் முன் பிணை கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடிகை மீரா மிதுன் மனுதாக்கல் செய்திருந்தார்.
மீரா மிதுன்
அந்த மனுவில், ஒலிநாடா பதிவு செய்யபட்ட தினத்தில் தான் ஒரு துக்க நிகழ்வுக்கு சென்றிருந்ததாகவும், தன் மீது பொய்யாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டிருந்தார். இந்த மனு தொடர்பான விசாரணை நேற்று நடைபெற்றது. இதில் காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், நடிகை மீரா மிதுன் அவதூறு பரப்புவதையே வாடிக்கையாக வைத்துள்ளார் என்றும், தற்போது முதல் அமைச்சர் மீது அவதூறு பரப்பியுள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டது. இதனால், அவரை கைது செய்து விசாரிக்க வேண்டிய அவசியம் இருப்பதனால், மீரா மிதுனுக்கு முன் பிணை வழங்கக் கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டது.
காவல்துறை தரப்பின் விளக்கத்தை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், மீரா மிதுன் முன் பிணை மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. மேலும், அவரை கைதுசெய்து விசாரிக்கவும், அவர் பதிவுகளை நீக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காவல்துறைக்கு நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
[embedded content]
Source: Malai Malar