Press "Enter" to skip to content

இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு நடந்த சதாபிஷேக விழா

இசையமைப்பாளர் இளையராஜா 80 வயதை அடைந்திருப்பதால், அமிர்தகடேஸ்வரர் கோவிலில் சதாபிஷேகம் செய்து வழிபட்டு இருக்கிறார்.

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா திருக்கடையூரில் தேவாரப்பாடல் பெற்ற அபிராமி சமேத அமிர்த கடேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான இக்கோவிலில் சுவாமி காலசம்ஹார மூர்த்தியாக எழுந்தருளி மார்க்கண்டேயனுக்காக எமனை வதம் செய்த தலமாதலால் இத்தலம் அட்டவீரட்டத் தலங்களில் ஒன்றாக திகழ்ந்து வருகிறது.

மேலும் இத்தலத்தில் அபிராமி அந்தாதி அருளிய அபிராமி பட்டருக்காக அபிராமி அம்மன் அமாவாசையை பவுர்ணமியாக்கிய வரலாறு நிகழ்ந்த தலம். இக்கோவிலில் 60, 70, 75, 80, 90, 100 வயதை பூர்த்தி அடைந்தவர்கள் முறையே சஷ்டியப்தபூர்த்தி, பீமரதசாந்தி, விஜயரத சாந்தி, சதாபிஷேகம், கனகாபிஷேகம், பூர்ணாபிஷேகம் மற்றும் ஆயுள் ஹோமங்களை செய்து சுவாமி, அம்பாளை தரிசித்தால் நீண்ட ஆயுள் கிடைக்கும் என்பது ஐதீகம்.

இத்தகைய சிறப்புமிக்க கோவிலுக்கு நேற்று மாலை 80 வயதை அடைந்த இசையமைப்பாளர் இளையராஜா சதாபிஷேகம் செய்து கொள்வதற்காக வந்தார். அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து சிவாச்சாரியார்கள் மங்கள வாத்தியங்கள் இசைக்க கோவிலுக்குள் அழைத்துச் சென்றனர். கோவில் கொடிமரத்தின் அருகே இளையராஜா கோ பூஜை, மற்றும் கஜ பூஜை செய்தார்.

தொடர்ந்து நூற்றுக்கால் மண்டபத்தில் 84 கலசங்கள் மற்றும் யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு, இளையராஜாவுக்கு சதாபிஷேக முதல் கால யாக பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து சிவகுமார் சிவாச்சாரியார், செந்தில்குமார் குருக்கள் ஆகியோர் சிறப்பு பூஜைகள் செய்து வைத்தனர்.

இந்நிகழ்ச்சியில் இயக்குனர் பாரதிராஜா, இளையராஜாவின் மகன் கார்த்திக் ராஜா, மகள் பவதாரணி, சகோதரர் கங்கை அமரன், பிரேம்ஜி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Related Tags :

[embedded content]

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »