Press "Enter" to skip to content

குடியரசு தின அணிவகுப்பு பயிற்சியில்…ஆளுநர், முதலமைச்சர் வருவது போல நடந்த ஒத்திகை!

தமிழக போலீஸாரின் வாரிசுகளுக்கு காவல்துறை வேலைவாய்ப்புகளில் 10 சதவீத இடஒதுக்கீடு செய்த தமிழக அரசின் அரசாணை செல்லும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

10% இடஒதுக்கீடு :

தமிழ்நாட்டில் பணியாற்றும் காவல் துறையினரின் மன உறுதி, விசுவாசம் மற்றும் நேர்மையை ஊக்கப்படுத்தும் வகையில், போலீசாரின் வாரிசுகளுக்கு காவல்துறை வேலைவாய்ப்புகளில் 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கி மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டார். அதனடிப்படையில், இந்த இடஒதுக்கீடு தொடர்பாக கடந்த 2001 ல் அரசாணை பிறப்பிக்கப்பட்டது. 

வழக்கை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம் :

அதன்படி, காவல்துறையின் நிர்வாகப் பிரிவில் பணியாற்றி ஓய்வுபெற்ற ஒருவரின் மகன், தனக்கு தமிழக அரசு பிறப்பித்துள்ள 10% இடஒதுக்கீட்டின் அடிப்படையில் பணி வழங்கக் கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளாஇயில் வழக்குத் தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்த தனிநீதிபதி, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். அதை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரித்த இரு நீதிபதிகள் அமர்வு, பொது வேலைவாய்ப்பில் நுழையும் வாய்ப்பு, அனைத்து குடிமக்களுக்கும் சமமாக வழங்கப்பட வேண்டுமெனவும், 10 சதவீத இடஒதுக்கீடு என்பது சட்டவிரோதமானது என்றும் கூறி, அரசாணையை ரத்து செய்து கடந்த 2018-ல் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையும் படிக்க : சுய லாபாத்துக்காக ஆட்சியை அடகு வைத்தது போல் கட்சியை அடகு வைத்த அதிமுக – உதயநிதி பரபரப்பு பேச்சு

உச்சநீதிமன்றத்தில் விசாரணை :

இந்த உத்தரவை தொடர்ந்து, 100 க்கும் மேற்பட்டோர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். ஆனால், இந்த வழக்கு நீண்டகாலமாக நிலுவையில் இருந்து வந்த நிலையில், நீதிபதிகள் எஸ்.கே. 

கவுல், அபய் எஸ்.ஒஹா,பி.வி.நாகரத்னா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அரசு தரப்பு வாதம் :

அப்போது, தமிழக காவல் துறையில் பணிபுரியும் காவலர்களின் வாரிசுகளுக்கு வேலைவாய்ப்பில் 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கி பிறப்பித்த அரசாணை எந்த விதத்திலும் சட்டவிரோதமானது அல்ல. இந்த வேலைவாய்ப்பு காவலர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் மத்தியில் உத்வேகத்தையும், மனஉறுதியையும் அதிகரிக்கச் செய்யும். இந்த இடஒதுக்கீட்டை உயர்நீதிமன்ற மதுரை கிளை முறையாகஆய்வு செய்யாமல் ரத்துசெய்திருப்பதால், போலீஸாரின் குடும்பத்தினர் பாதிக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.

உத்தரவிட்ட நீதிபதிகள் :

வாதங்களை கேட்டறிந்த நீதிபதிகள், ‘‘தமிழக காவல் துறையில் பணியாற்றும் போலீஸாரின் வாரிசுகளுக்கு காவல் துறையில் உள்ள காலி பணியிடங்களில் 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு பிறப்பித்த அரசாணை செல்லும் என்றும், அதனடிப்படையில் தற்போது வழக்குத் தொடர்ந்துள்ளவர்கள் மட்டுமின்றி, தகுதி வாய்ந்த அனைவருக்கும் உரிய இடஒதுக்கீட்டைப் பின்பற்றி பணி வழங்கலாம் என்றும் கூறி, உயர்நீதிமன்ற மதுரை கிளை பிறப்பித்த உத்தரவையும் ரத்து செய்து உத்தரவிட்டனர். 

மேலும், உயர் நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவு காரணமாக விண்ணப்பித்து, வாய்ப்பு இழந்த தகுதியானவர்களுக்கும், இந்த உத்தரவின் அடிப்படையில், வயதுவரம்பைத் தளர்த்தி தமிழக காவல்துறையில் பணி வழங்க எவ்வித தடையும் இல்லை” என்று உத்தரவிட்டுள்ளனர்.

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »