இந்தியாவின் முன்னணி பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால், இன்று தனது சகோதரியுடன் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார்.
புதுடெல்லி:
இந்தியாவின் முன்னணி பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் (வயது 29). அரியானாவில் பிறந்த இவர் தற்போது ஐதராபாத்தில் வசித்து வருகிறார். இந்தியாவுக்காக பல்வேறு சர்வதேச போட்டிகளில் பங்கேற்று சாம்பியன் பட்டங்களை வென்றுள்ளார். காமன்வெல்த், ஒலிம்பிக் உள்ளிட்ட முக்கியத்துவம் வாய்ந்த போட்டிகளில் பதக்கம் வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளார்.
இந்நிலையில், சாய்னா நேவால் இன்று டெல்லியில் உள்ள பாரதிய ஜனதா கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு சென்று அக்கட்சியின் அடிப்படை உறுப்பினராக சேர்ந்தார்.
கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் அர்ஜூன் சிங் முன்னிலையில் சாய்னா பாஜகவில் இணைந்துள்ளார். அவருடன் அவரது சகோதரியும் பாஜகவில் தன்னை இணைத்துக்கொண்டார்.
சாய்னா நேவால் மற்றும் அவரது சகோதரியை அர்ஜூன் சிங் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் வரவேற்று வாழ்த்து தெரிவித்தனர். சாய்னா நேவால் வருகையால் பாஜகவுக்கு கூடுதல் பலம் என்று கருதப்படுகிறது.
டெல்லியில் வரும் 8-ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், சாய்னா நேவால் பாஜக சார்பில் பிரசாரத்தில் ஈடுபடலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
Related Tags :
Source: Maalaimalar