திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தான் நாளைய தமிழகத்தின் தலைவர் என்று சசிகலாவின் சகோதரர் திவாகரன் கூறியுள்ளது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சையில் திமுக மாவட்டச் செயலாளரும், திமுக எம்.பி.யுமான எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் இல்லத் திருமண விழா தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் திமுக நிர்வாகிகள் மற்றும் திவாகரன், காங்கிரஸ் கட்சியினர் கலந்துகொண்டனர். இந்த விழாவில் பேசிய சசிகலாவின் தம்பி திவாகரன், திராவிட இயக்கங்களை கட்டிக்காக்கும் ஒரே நம்பிக்கை நட்சத்திரமாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விளங்குகிறார்.
இன்றைய தமிழகத்தின் நிலை கவலைக்குரியதாக உள்ளது. தமிழர்கள் இரண்டாம் தரக் குடிமக்களாக ஆக்கப்பட்டுக் கொண்டிருக்கிறோம். பெரியார் பிரச்சனையில் கன்னடத்திலிருந்து வந்த ஒருவர் பெரியாரை இழிவாகப் பேசுகிறார். இதேபோல் கர்நாடகாவில் நாம் கன்னடர்களை இழிவாகப் பேசினால் சும்மா விடுவார்களா? அதைச் சிந்தித்துப் பார்க்கவேண்டும். தமிழர்களுக்காக யார் போராடுவார்களோ, தமிழர்களை யார் காப்பாற்றுவார்களோ அவர்களின் பின்னால் நாம் நிற்கவேண்டும்.
தமிழகத்தில் திராவிட பாரம்பரியத்தை காக்க வேண்டும். அதை காக்கும் ஒரே சக்தி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தான். நாளைய தமிழகம் அவர்தான். அரசியலில் நான் எதையும் எதிர்பார்க்க மாட்டேன். சிலருக்கு இடைஞ்சல் செய்வதற்காகவே அரசியலுக்கு வந்தேன் 85 சதவீத திமுகவின் வெற்றியே உள்ளாட்சி தேர்தலில் உறுதி செய்யப்பட்டிருந்தது. அதில் பெரும்பாலும் ஆளுங்கட்சியால் தட்டி பறிக்கப்பட்டிருக்கிறது என்று கூறியுள்ளார். திவாகரனின் இந்த அதிரடி பேச்சால் விரைவில் அவர் திமுகவில் சேருவார் என்ற எதிர்பார்ப்பை கட்சியினர் இடையே ஏற்பட்டுள்ளது.
Source: AsianetTamil