Press "Enter" to skip to content

புதுவையில் வெடிகுண்டு வீசி காங்கிரஸ் பிரமுகர் வெட்டிக்கொலை

புதுவையில் வெடிகுண்டு வீசி காங்கிரஸ் பிரமுகர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாகூர்:

புதுவை கிருமாம்பாக்கம் அருகே பிள்ளையார்குப்பம் அங்காளம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சாம்பசிவம் (வயது36). காங்கிரஸ் பிரமுகரான இவர் அமைச்சர் கந்தசாமியின் தீவிர ஆதரவாளர் ஆவார்.

அமைச்சர் கந்தசாமிக்கு இன்று பிறந்தநாளையொட்டி விழா ஏற்பாடுகளை சாம்பசிவம் ஏற்பாடு செய்து வந்தார். மணக்குள விநாயகர் கோவிலில் தங்க தேர் இழுக்க இன்றுகாலை ஊர் பிரமுகர்களை திரட்டி விட்டு பின்னர் சாம்பசிவம் புதுவைக்கு மோட்டார் சைக்கிகளில் புறப்பட்டு வந்தார்.

கிருமாம்பாக்கம் அரசு தொடக்கப்பள்ளி அருகே வந்த போது அங்கு பதுங்கி இருந்த மர்ம கும்பல் திடீரென சாம்பசிவம் மீது நாட்டு வெடிகுண்டுகளை வீசினர். இதில் நிலைகுலைந்து விழுந்த சாம்பசிவத்தை அந்த கும்பல் சரமாரியாக அரிவாளால் வெட்டி விட்டு தப்பி ஓடிவிட்டது.

இதில் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் சாம்பசிவம் பரிதாபமாக இறந்து போனார். இதுபற்றி தகவல் அறிந்ததும் பிள்ளையார்குப்பம் மற்றும் கிருமாம்பாக்கம் ஊர் மக்கள் திரண்டு வந்தனர். அவர்கள் கொலை செய்யப்பட்டு இறந்து கிடந்த சாம்பசிவத்தின் உடலை பார்த்து கதறி அழுதனர்.

இதைத்தொடர்ந்து கிருமாம்பாக்கம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் வழக்கு பதிவு செய்து சாம்பசிவத்தை வெடிகுண்டு வீசி கொலை செய்த கும்பலை தேடி வருகிறார்கள்.

காங்கிரஸ் பிரமுகர் சாம்பசிவம் கொலை செய்யப்பட்ட சம்பவத்தால் கிருமாம்பாக்கம் மற்றும் பிள்ளையார்குப்பம் பகுதியில் பதட்டம் நிலவி வருகிறது. அங்கு அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

வெடிகுண்டு வீசி கொலை செய்யப்பட்ட சாம்பசிவத்தின் மைத்துனரான வீரப்பன் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு இதேபோன்று வெடிகுண்டு வீசி வெட்டிகொலை செய்யப்பட்டார். வீரப்பன் அமைச்சர் கந்தசாமியின் உதவியாளராக இருந்து வந்தார்.

வீரப்பன் இறந்த பின்னர் சாம்பசிவம் அமைச்சர் கந்தசாமிக்கு நெருக்கமாக இருந்து தொகுதியில் அனைத்து பணிகளையும் செய்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »