பெய்ஜிங்: சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் பலியானவர்களின் எண்ணிக்கை 213 ஆக அதிகரித்துள்ளது. நேற்று ஒரு நாளில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா வைரஸ் தாக்கியுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சுமார் 10000 ஆக அதிகரித்துள்ளது .
சீனாவின் ஹுபே மாகணத்தின் தலைநகரான வுஹான் நகரில் தான் கொரோனா வைரஸ் முதல் முதலாக தோன்றியது.
அந்த நகரில் சுமார் 1.1 கோடி மக்கள் வசிக்கிறார்கள். இருமல், தும்மல், கைகளை கழுவாமல் அடுத்தவரை தொடுவது போன்றவற்றின் மூலம் கொரோனா வைரஸ் வேகமாக பரவ ஆரம்பித்தது.
செத்து மடியும் மக்கள்.. உலக சுகாதார அவசர நிலை அறிவிப்பு.. மிரட்டும் கொரோனா
சீனா அதிர்ச்சி
மூச்சுக்காற்றின் மூலம் பரவும் இந்த நோயின் தாக்கத்தை முதலில் சீனா பெரிதாக கவனிக்கவில்லை. ஒரே நாளில் ஆயிரக்கணக்கானோர் கொரோனா தாக்கத்தால் பாதிக்கப்பட்டு 100க்கும் மேற்பட்டோர் இறந்த பின்னரே அதன் தீவிரத்தை உணர்ந்தது. உடனடியாக கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க வுஹான் நகரத்தை மூடியது. கடைகளையும் மூட உத்தரவிட்டது. மக்கள் வெளியில் வராமல் வீடுகளுக்குள்ளேயே முடக்கி வைக்க இந்த வேலையை சீனா செய்தது. ஆனால் அதற்குள் பலருக்கும் பரவிவிட்டது.
10000 பேருக்கு பாதிப்பு
கொரோனாவால் உயிரிழப்போரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்க ஆரம்பித்து. நான்கில் ஒருவரின் உடல் நிலை மோசமடைந்து வருகிறது. நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள் மரணம் அடைந்து வருகிறார்கள். தற்போது சீனாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்வர்களின் எண்ணிக்கை குறித்து அந்த நாட்டு அரசு வெளியிட்ட தகவலின்படி 1000 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்தோரின் எண்ணிக்கை 213 ஆக உயர்ந்துள்ளது.
டாக்டர்கள் விரைவு
சீனா முழுவதுமே மக்கள் மாஸ்குடன் தான் வலம் வருகிறார்கள். பரிசோதனை கூடங்களில் போய் தீவிர சோதனை செய்து வருகிறார்கள். ஒரே நாளில் பல ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்படுவதால் மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன. அவர்களுக்கு நம்பிக்கை அளித்து சிகிச்சை அளிக்கும் பணியில் பல்லாயிரம் சுகாதாரத்துறை பணியாளர்கள் மருத்துவர்கள் வுஹான் உள்ளிட்ட பல நகரங்களில் குவிந்துள்ளனர்.
கண்டுபிடிக்க முயற்சி
கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை என்றால் உயிரிழப்பு என்பது அதிகரிக்கும் என்பதால் மாற்று மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் சீனா அதிதீவிரமாக ஈடுபட்டுள்ளது. ஆஸ்திரேலியா, அமெரிக்கா உள்பட பல நாடுகளும் கொரோனாக்கு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கி உள்ளன. விரைவில் மருந்து கண்டுபிடித்தால் பல ஆயிரம் மக்களை காக்க முடியும் என்பதால் அது உடனே கண்டுபிடிக்கப்பட வேண்டும் என்பதே உலக மக்களின் வேண்டுதலாக உள்ளது.
Source: OneIndia