டெல்லி: உத்தரப்பிரதேச மாநிலத்தில் பரூக்காபாத்தில் பிணைக் கைதிகளாக குழந்தைகள் அடைக்கப்பட்ட விவகாரத்தில் கடுமையாக தாக்கிய குற்றவாளியின் மனைவி பலியாகிவிட்டார்.
உத்தரப்பிரதேச மாநிலம், ஃபருக்காபாத் பகுதியைச் சேர்ந்தவர் சுபாஷ் பாதம். அந்த நபர் கொலை குற்றவாளி ஆவார். அவர் அண்மையில் ஜாமீனில் வெளியே வந்தது தெரியவந்தது.
இந்த நிலையில் இவர் அங்குள்ள குழந்தைகளை தனது வீட்டுக்கு மகளின் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு அழைத்துள்ளார். அப்போது அவரது வீட்டுக்கு நேற்று மாலை 3 மணிக்கு 15 வயதுக்குட்பட்ட சிறுவர்கள், சில பெண்கள் வந்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு போலீஸார் வந்தனர். அப்போது பேச்சுவார்த்தை நடத்த வந்த போலீஸ்காரரை துப்பாக்கியால் சுபாஷ் சுட்டார். 23 குழந்தைகள் மாட்டிக் கொண்டதால் வீடு முன் குழுமிய குழந்தைகளின் பெற்றோர், உறவினர்கள், பொதுமக்கள் என குவிந்தனர்.
இதையடுத்து சிறிது நேரம் வெளியே வந்த சுபாஷின் மனைவியை பார்த்தவுடன் அங்கிருந்தவர்களுக்கு ஆத்திரம் தலைக்கேறியது. வீட்டுக்குள்ளே இருந்து கொண்டு கணவன் செய்வதை தடுக்கத் தவறியதால் அந்த பெண் மீது ஆத்திரம் ஏற்பட்டது.
இதையடுத்து அந்த பெண்ணை ஊர்காரர்கள் பிடித்து அடித்தனர். அவர் போலீஸாரால் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். எனினும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனிடையே துப்பாக்கிச் சண்டையில் அந்த நபரை என்கவுன்ட்டரில் சுட்டுக் கொன்ற போலீஸார் 23 குழந்தைகளையும் மீட்டனர்.
Source: OneIndia