சட்டமன்றத் தேர்தலில் இளைஞரணிக்கு அதிக இடங்களை வழங்க வேண்டுமென உதயநிதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
உள்ளாட்சித் தேர்தலில் திமுக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் மாநாடு இன்று (ஜனவரி 31) காலை 10 மணிக்கு திருச்சி கேர் கல்லூரி வளாகத்தில் துவங்கியது. அண்ணா, கலைஞர் ஆகியோரின் உருவப்படங்களுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதன்பிறகு பொருளாளர் துரைமுருகன் உள்ளிட்ட திமுகவின் முக்கிய நிர்வாகிகள் மலர்தூவி மரியாதை செலுத்தினர். பின்னர் ஸ்டாலின் குத்துவிளக்கு ஏற்ற, மாநாடு துவங்கியது. நிகழ்வில் திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு வரவேற்புரையாற்றினார்.
நிகழ்வில் உள்ளாட்சிப் பிரதிநிதிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் உரையாற்றினர். பலரும் தான் தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதியில், உள்ளாட்சிப் பணிகளில் முறைகேடுகள் நடைபெற்றதாக புகார் வாசித்தனர். இடையில் மைக் பிடித்த கேன்.என்.நேரு, இளைஞரணிச் செயலாளர் உதயநிதிக்கு வேறு பணி இருப்பதால், தற்போது அவர் உரையாற்றிவிட்டு நினைவுப் பரிசை வாங்கிக் கொள்வார் என்று தெரிவித்தார்.
தொடர்ந்து, பேசினால்தான் பரிசு கொடுப்பேன் என்று கூறிவிட்டார்கள் என சிரித்தபடியே உரையாற்றத் துவங்கிய உதயநிதி, “தலைவருக்கும், அனைத்து மாவட்டச் செயலாளர்களுக்கு ஒரு கோரிக்கை. ஊரக உள்ளாட்சித் தேர்தலில் எங்களது இளைஞரணியினருக்கு கொஞ்சம்தான் வாய்ப்பு கொடுத்தார்கள். அதில் நாங்கள் நிறைய பேர் ஜெயித்துகாட்டிவிட்டோம். பரவாயில்லை, வரும் சட்டமன்றத் தேர்தலில் இளைஞரணிக்கு அதிக வாய்ப்பு கொடுத்தால், தம்பிகள் கண்டிப்பாக ஜெயித்துகாட்டுவோம். ஊரக உள்ளாட்சித் தேர்தலில் இளைஞரணிக்கு வாய்ப்பளித்த அனைத்து மாவட்டச் செயலாளர்களுக்கு நன்றி” எனத் தெரிவித்தார்.
உதயநிதிக்கு நினைவுப் பரிசாக வீரவாள் வழங்கி கவுரவித்தார் நேரு. இதனைத் தொடர்ந்து திமுகவின் முன்னணி நிர்வாகி ஒவ்வொருவராக பேசி வருகின்றனர். கூட்டத்தில் இறுதியாக உள்ளாட்சிப் பிரதிநிதிகள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்று அவர்களுக்கு ஆலோசனைகள் வழங்கப்படவுள்ளன.
Source: Minambalam.com