சென்னை: குரூப் 2ஏ முறைகேடு தொடர்பாக சிபிசிஐடி போலீஸ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. அரசு பணியாளர் தேர்வாணைய புகாரை அடுத்து குரூப் 2 தேர்வு முறைகேடு தொடர்பாக சிபிசிஐடி விசாரணை தீவிரமடைந்துள்ளது. குரூப் 2ஏ தேர்வு தொடர்பான ஆவணங்களை சிபிசிஐடி போலீசிடம் ஒப்படைத்துள்ளதை அடுத்து விசாரணை தீவிரமடைகிறது.
டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு முறைகேடு தொடர்பாக மேலும் 2 பேரை சிபிசிஐடி கைது செய்துள்ளது. டிஎன்பிஎஸ்சி தட்டச்சர் மாணிக்கவேல், பார்சல் சர்வீஸ் வாகன ஓட்டுநர் கல்யாணசுந்தரம் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். முக்கிய குற்றவாளி ஜெயக்குமார், கிளார்க் ஓம்காந்தனுக்கு இருவரும் உடந்தையாக செயல்பட்டுள்ளனர் என்று சிபிசிஐடி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2019ல் நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு தொடர்பாக 39 பேரின் புதிய பதிவெண் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வர்கள் 39 பேரின் புதிய பதிவெண் பட்டியலை டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் வெளியிட்டது. பதிவெண் பட்டியலில் இடம்பெற்ற தேர்வர்கள் பிப்ரவரி 1ம் தேதி முதல் சான்றிதழ் நகல்களை பதிவேற்றம் செய்யலாம். பிப்ரவரி 7ம் தேதி வரை ஆன்லைன் மூலம் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்யலாம் என்று டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது. முறைகேட்டில் ஈடுபட்ட 99 பேருக்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்ட நிலையில் புதிய பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
Source: Dinakaran