Press "Enter" to skip to content

மு.க. ஸ்டாலின் முதல்வராவதை எந்தக் கொம்பனாலும் தடுக்க முடியாது… திமுக மாநாட்டில் முழங்கிய துரைமுருகன்!

வருகிற சட்டப்பேரவைத் தேர்தலில் மு.க.ஸ்டாலின் முதல்வராவதை எந்தக் கொம்பனாலும் தடுக்க முடியாது என்று திமுக பொருளாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்,
ஊரக உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற திமுகவைச் சேர்ந்த உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாடு திருச்சியில் நடைபெற்றது. இந்த திமுக பொருளாளர் துரைமுருகன் பேசும்போது, “ஊரக உள்ளாட்சி தேர்தலின் வெற்றி அடுத்த ஆண்டு வர உள்ள சட்டப்பேரவைத் தேர்தலுக்கு அச்சாரம். உள்ளாட்சித் தேர்தலில் திமுக வெற்றி பெற்ற பல இடங்களில் வெற்றியை அறிவிக்காமலும் சான்றிதழை தராமலும் மறுத்தனர். கழகத் தலைவரும், டி.ஆர்.பாலுவும் மாநில தேர்தல் ஆணையரை விடவில்லை. இந்தத் தேர்தலில் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்யவில்லை. ஆனாலும் அவருடைய உழைப்பு உங்கள் வெற்றியில் இருக்கிறது.
இன்றைக்கு அமைச்சராக இருக்கும் ஒருவர், (கருப்பணன்) ஆணவத்தோடு பேசுகிறார். திமுக வெற்றி பெற்ற பஞ்சாயத்துக்களுக்கு நிதி ஒதுக்கமாட்டேன் என்று சொல்கிறார். இது என்ன உங்கள் அப்பன் வீட்டு பணமா? அவர் அமைச்சராக இருக்கிறார் என்றுகூட எனக்குத் தெரியாது. அரசியல் அமைப்பு சட்டமும் அவருக்கு தெரியவில்லை. உள்ளாட்சி அமைப்பு சட்டமும் அவருக்கு தெரியவில்லை.  நிதி தர மறுத்தால், நீங்கள் கட்சித் தலைமையை தொடர்புகொள்ளுங்கள். ஒவ்வொரு நாளும் சட்டப்பேரவையை நடக்காது. ஒவ்வொரு நாளும் சட்டப்பேரவையில் எங்கள் குரல் ஒலிக்கும்.
தலைவர் கலைஞர்  ராஜதந்திரம் படைத்த மகனை  நமக்கெல்லாம் தலைவராக தந்திருக்கிறார். அவருடைய ராஜதந்திரத்தால் இன்று 6500 இடங்களையும், நாடாளுமன்றத் தேர்தலில் 39 இடங்களையும் திமுக. பெற்றுள்ளது. இவர்கள் நகராட்சி தேர்தலை நடத்துவார்களா இல்லையா என்றெல்லாம் தெரியவில்லை.

 
கிராமப் புறங்களில் எப்படியும் வெற்றி பெற்று விடலாம் என்று கணக்குப் போட்டு உள்ளாட்சி தேர்தலை நடத்தினார்கள். ஆனால் தீர்ப்பு எதிர்மாறாக அவர்களுக்கு அமைந்து விட்டது. இதனால், அவர்கள் நகராட்சித் தேர்தலை நடத்துவார்களா என தெரியவில்லை. ஆனால், வருகிற சட்டப்பேரவைத் தேர்தலை நடத்தியே தீரவேண்டும். அதில் மு.க.ஸ்டாலின் முதல்வராவதை எந்தக் கொம்பனாலும் தடுக்க முடியாது” என்று துரைமுருகன் பேசினார்.

Source: AsianetTamil

More from செய்திகள்More posts in செய்திகள் »