மாலை நேரத்தில் செய்து உண்ணக்கூடிய சிறந்த சிற்றுண்டி கட்லெட். இன்றைய குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடும் உணவும் இதுவே. பல வகை கட்லெட்டுகள் இருந்தாலும் சத்துகள் பல கொண்ட இந்தப் பச்சைப்பயறு கட்லெட்டைச் செய்து எல்லோரையும் அசத்தலாம்.
என்ன தேவை?
பச்சைப்பயறு – கால் கப்
வெங்காயம் – 50 கிராம்
பச்சை மிளகாய் – 2
இஞ்சி – அரை அங்குலத் துண்டு (தோல் சீவவும்)
உருளைக்கிழங்கு – ஒன்று (பெரியது)
பிரெட் – 2 ஸ்லைஸ்
மல்லித்தூள் (தனியாத்தூள்) – முக்கால் டீஸ்பூன்
மிளகாய்த்தூள் – அரை டீஸ்பூன்
கரம் மசலாத்தூள் – கால் டீஸ்பூன்
ரஸ்க் தூள் – அரை கப்
மைதா – ஒரு டேபிள்ஸ்பூன்
கொத்தமல்லித்தழை – சிறிதளவு
உப்பு, எண்ணெய் அல்லது நெய் – தேவையான அளவு.
எப்படிச் செய்வது?
பச்சைப்பயற்றை நன்கு வேகவைத்துக்கொள்ளவும். வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சியைப் பொடியாக நறுக்கிக்கொள்ளவும். உருளைக்கிழங்கை வேகவைத்து, தோலுரித்து மசித்துக்கொள்ளவும். பிரெட்டைத் தண்ணீரில் நனைத்து, தண்ணீரைப் பிழிந்துவிட்டு மசித்து வைக்கவும். பச்சைப்பயறு, வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சியைச் சேர்த்து மிதமாகப் பிசைந்துகொள்ளவும். இத்துடன் வேகவைத்த உருளைக்கிழங்கு, பிரெட், உப்பு, மல்லித்தூள், மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள், கொத்தமல்லித்தழை சேர்த்து நன்றாகக் கிளறி சின்னச் சின்ன உருண்டைகளாகப் பிடித்து, தட்டி கட்லெட்டுகளாக செய்து வைக்கவும்.
மைதாவை 50 மில்லி தண்ணீர் சேர்த்துக் கரைத்துக்கொள்ளவும். கட்லெட்டுகளை மைதா மாவுக் கரைசலில் நன்கு முக்கியெடுத்து, ரஸ்க் தூளில் புரட்டி, தோசைக்கல்லில் போட்டு எண்ணெய் அல்லது நெய் ஊற்றி இருபுறமும் சிவக்க வேகவிட்டு எடுக்கவும். தக்காளி சாஸுடன் பரிமாறவும். மாலை சிற்றுண்டிக்கு உகந்தது.
Source: Minambalam.com