Press "Enter" to skip to content

“இந்தியாவை மென்மேலும் நெருக்கடிக்குள் ஆழ்த்தப்போகும் வரவு செலவுத் திட்டம்” திருமாவளவன் தகவல்

சென்னை: “அடித்தட்டு மக்களுக்கு விரோதமான பட்ஜெட். இந்தியாவை மென்மேலும் நெருக்கடிக்குள் ஆழ்த்தப்போகும் பட்ஜெட்” என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் பட்ஜெட் தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில், ”நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பாஜக அரசின் நிதிநிலை அறிக்கை அதலபாதாளத்தில் சரிந்துகிடக்கும் இந்தியப் பொருளாதாரத்தை மீட்பதற்கான எந்த ஒரு முயற்சியையும் கொண்டிருக்கவில்லை. வெற்றுச் சவடால்களைக் கொண்ட அலுப்பூட்டும் அலங்கார உரையாகவே இந்த பட்ஜெட் உரை அமைந்திருக்கிறது. வார்த்தை ஜாலங்களை வைத்தே மக்களை ஏமாற்றலாம் என மோடி அரசு நம்புகிறது என்பது இதன் மூலம் தெளிவாகிறது.

இந்தியாவின் ‘ஜிடிபி’ முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு வீழ்ச்சி அடைந்து கொண்டிருக்கிறது. இந்தச் சூழ்நிலையில் இந்திய பொருளாதாரத்தைச் சரிவிலிருந்து மீட்பதற்கான நடவடிக்கைகள் குறித்து பட்ஜெட்டில் அறிவிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு பரவலாகக் காணப்பட்டது. ஆனால், பெருத்த ஏமாற்றமே மிஞ்சியிருக்கிறது.

imageபொருளாதாரத்தை மீட்டெடுப்பதை கைவிட்டுவிட்ட நிர்மலா சீதாராமனின் மத்திய பட்ஜெட்: ப.சிதம்பரம்

ஜிடிபி வளர்ச்சி

விவசாயத்துறைக்கென 16 அம்சத் திட்டங்களை நிதியமைச்சர் நிர்மலாசீதாராமன் அறிவித்திருக்கிறார். சூரியசக்தி மூலம் இயங்கும் பம்பு செட்டுகள் 20 லட்சம் விவசாயிகளுக்கு ஏற்படுத்தித் தரப்படும் என்பது தவிர, வேறு உருப்படியான எந்த அறிவிப்பும் அதிலில்லை. வழக்கம்போல விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாகும் என்று வாக்குறுதி மட்டுமே இந்த ஆண்டும் அளிக்கப்பட்டிருக்கிறது. இந்தியாவின் ஜிடிபியில் விவசாயத்தின் பங்கு 2 % என்ற அளவுக்குக் குறைந்துள்ளது. இந்நிலையில், விவசாயத் துறையைக் காப்பாற்றுவதற்கென்று எந்தவொரு சிறப்புத் திட்டத்தையும் பாஜக அரசு அறிவிக்காதது அதிர்ச்சியளிக்கிறது.

ஊழியர்களின் எதிர்காலம்

பொதுத்துறை நிறுவனங்களைத் தொடர்ந்து தனியாருக்கு விற்று வரும் மோடி அரசு இந்த ஆண்டு எல்ஐசியின் பங்குகளையும் விற்கப் போவதாக இந்த பட்ஜெட்டில் அறிவித்திருக்கிறது. எல்ஐசியில் முதலீடு செய்திருக்கிற கோடிக்கணக்கான நடுத்தர வர்க்க மக்களுக்கு இந்த அறிவிப்பு பெரும் அச்சத்தை உருவாக்கியிருக்கும் என்பதுடன், அந்நிறுவனத்தில் பணியாற்றும் லட்சக்கணக்கான ஊழியர்களின் எதிர்காலமும் இப்போது கேள்விக்குள்ளாகி இருக்கிறது. இந்த அறிவிப்பை மோடி அரசு திரும்பப் பெற வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம்.

நன்றி விசுவாசம்

மோடி அரசு கடந்த ஆண்டு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ‘வரிச்சலுகை’ வழங்கியது. அதனால் பொருளாதாரத்தில் எந்த முன்னேற்றமும் ஏற்பட்டுவிடவில்லை. ஆனால் இந்த ஆண்டும் அதேபோல கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வரிச்சலுகை வழங்கப்பட்டிருக்கிறது. இது கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு மோடி அரசு காட்டும் நன்றி- விசுவாசத்தை வெளிப்படுத்துகிறது.

ஏமாற்றுதல்

வருமான வரி செலுத்தும் நடுத்தர வர்க்கத்தினருக்குக் குறைந்த அளவிலாவது கருணை காட்டும்; சலுகை வழங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. மாறாக, புதிதாக வரி செலுத்தும் முறையை அறிவித்திருக்கும் நிதியமைச்சர், ‘பழைய முறையும் தொடரும், புதிய முறையும் இருக்கும், எதை வேண்டுமானாலும் தேர்வு செய்து கொள்ளலாம்’ என்று கூறியிருக்கிறார். புதிய முறைக்கு போனால் முன்பிருந்த வசதிகள் இருக்காது என்ற எச்சரிக்கையையும் அவர் தெரிவித்திருக்கிறார். கணக்கிட்டுப் பார்க்கும்போது பழைய முறையே நலம் பயக்கும் என்பதாகத் தெரிகிறது. எனவே, இந்த அறிவிப்பு நடுத்தர வர்க்கத்தினரை நம்ப வைத்து ஏமாற்றுவதாக உள்ளது

மிகக்குறைந்த தொகை

எஸ்சி / எஸ்டி மக்களுக்கு பட்ஜெட்டில் முறைப்படி மக்கள்தொகை அடிப்படையில் ஒதுக்க வேண்டிய (எஸ்சிஎஸ்பி/ டி.எஸ்.பி) தொகையை மோடி அரசு ஒவ்வொரு ஆண்டும் குறைத்துக்கொண்டே வருகிறது. அத்துடன், எஸ்சி வகுப்பைச் சார்ந்த மாணவர்கள் உயர்கல்வி பெறுவதற்குரிய ‘போஸ்ட்மெட்ரிக் ஸ்காலர்ஷிப்’-க்கான தொகையைக் கடந்த ஆண்டு சுமார் ரூ.3000 கோடி அளவுக்கு குறைத்தார்கள். இந்த ஆண்டாவது அதை ஈடுசெய்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், போன ஆண்டு ஒதுக்கியதைவிட ரூ.100 கோடி மட்டுமே அதிகமாக ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோல எஸ்சி /எஸ்டி மாணவர்களுக்கான தங்கும் விடுதிகள் கட்டுவதற்கும் மிகக் குறைவான தொகையே ஒதுக்கப்பட்டிருக்கிறது.

அங்கன்வாடி தொகை

மகளிர் மேம்பாட்டுத் துறையின்கீழ் அங்கன்வாடிகளுக்கு ஒதுக்கப்படும் தொகை கடந்த ஆண்டு ஒதுக்கிய தொகையில் சுமார் ரூ.200 கோடி செலவு செய்யாமல் திருப்பி எடுத்துக் கொண்டுவிட்டார்கள். இந்த ஆண்டு எவ்வளவு செலவு செய்வார்கள்; எவ்வளவு எடுத்துக் கொள்வார்கள் என்று தெரியவில்லை. இப்போது செய்யப்பட்டிருக்கும் உயர்வு வெறும் 500 கோடி ரூபாய் மட்டுமே ஆகும்

நிதி ஒதுக்கீடு

கிராமப்புற ஏழை மக்களுக்கு மிகவும் பயனளிக்கக்கூடிய ‘மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டத்தின்’ கீழ் கடந்த ஆண்டு 60,000 கோடி ஒதுக்கப்பட்டது. கிராமத்தில் வேலை வாய்ப்பு அதிகரித்தால் தான் பொருளாதாரத்தை சரிவில் இருந்து மீட்க முடியும் என்று பொருளாதார வல்லுநர்களெல்லாம் கூறி வந்த நிலையில், இந்த திட்டத்திற்கு அதிக அளவில் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கடந்த ஆண்டை விட ரூ.1500 கோடி மட்டுமே கூடுதலாக இந்த ஆண்டு பட்ஜெட்டில் ஒதுக்கி இருக்கிறார்கள்.

ஏற்கக் கூடாது

அரசு மற்றும் பொதுத்துறை வங்கிகளில் ஊழியர் பணிகளில் சேர்வதற்கு தேசிய அளவில் தகுதித் தேர்வு நடத்தப்பட்டு அதன் மூலம் நியமனங்கள் மேற்கொள்ளப்படும் என்ற புதிய அறிவிப்பு இந்த பட்ஜெட்டில் சொல்லப்பட்டிருக்கிறது. மாநில அரசு ஊழியர்களையும் தேசிய அளவிலான தகுதித் தேர்வு நடத்தித் தேர்வு செய்வது என்றால் அது மாநில அரசின் அதிகார வரம்புக்குள் தலையிடுவதாகும். எனவே இதை தமிழக அரசு ஏற்கக்கூடாது என வலியுறுத்துகிறோம். மொத்தத்தில் இது அடித்தட்டு மக்களுக்கு விரோதமான பட்ஜெட். இந்தியாவை மென்மேலும் நெருக்கடிக்குள் ஆழ்த்தப்போகும் பட்ஜெட்” என்று திருமாவளவன் கூறியுள்ளார்.

Source: OneIndia

More from செய்திகள்More posts in செய்திகள் »