Press "Enter" to skip to content

பழநி அருகே 16ம் நூற்றாண்டை சேர்ந்த கல்வெட்டுகள் கண்டுபிடிப்பு

பழநி: பழநி – கொடைக்கானல் சாலையில் உள்ள கோயிலில் 16ம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம், பழநி அருகே கொடைக்கானல் சாலையில் அய்யனார் கோயில் உள்ளது. இக்கோயிலை குலதெய்வமாக வழிபட்டு வரும் ஜெயக்குமார் என்பவர் கோயிலில் பழமையான கல்வெட்டுகள் மற்றும் சிற்பங்கள் இருப்பதாக தகவல் கொடுத்துள்ளார். இத்தகவலின்பேரில் தொல்லியல் ஆய்வாளர் நாராயணமூர்த்தி மற்றும் ஆய்வு மாணவர்கள் இக்கோயிலில் களஆய்வு மேற்கொண்டனர். அப்போது பழமை வாய்ந்த சிலைகள் மற்றும் கல்வெட்டுகள் இருப்பதை கண்டுபிடிக்கப்பட்டது.

இதுகுறித்து தொல்லியல் ஆய்வாளர் நாராயணமூர்த்தி நிருபர்களிடம் கூறியதாவது: அய்யனார் கோயிலில் மேற்கொண்ட ஆய்வில் 3 கல்வெட்டுகளும், 3 சிலைகளும் கண்டுபிடிக்கப்பட்டன. இங்கு கிடைத்த பழமையான கல்வெட்டு 16ம் நூற்றாண்டைச் சேர்ந்தவை. உடைந்து, சிதைந்து போன இக்கல்வெட்டு சின்னப்பூசாரி என்பவர், கொண்டம நாயக்கர் ஆட்சி காலத்தில் இக்கோயிலை உருவாக்கியதாகக் தெரிவிக்கிறது. இக்கல்வெட்டின் மூலம் இக்கோயில் கிபி 1529ம் ஆண்டு உருவானதை அறிய முடிகிறது. பலகையில் உள்ள அடுத்த கல்வெட்டு கொண்டம நாயக்கர் ஆட்சி காலத்தில் 1728ம் ஆண்டு பொறிக்கப்பட்டுள்ளது. கோயிலுக்கு மேல்புறத்தில் உள்ள பெரிய அணையில் இருந்து நீர் ஓடியது, நிலத்தை வரி நீக்கி அய்யனாருக்கு தானம் அளிக்கப்பட்ட செய்தியும் கல்வெட்டில் உள்ளது. வரி இல்லாத நிலத்தில் விளையும் நெல்லில் அடிப்புக்கும், அறுப்புக்கும் தலா ஒரு குறுணி அளவு அளிக்க வேண்டும்.

மீதமுள்ள வருவாய் நெல்லைக் கொண்டு தினமும் ஒரு விளக்கு எரிக்க வேண்டும் என்றும் குறிப்பிடுகிறது. 15 வரிகளில் உள்ள இக்கல்வெட்டு முற்று பெறவில்லை. அய்யனார் கோயிலில் கிடைத்த 3வது கல்வெட்டு முன் மண்டப முகப்பில் பொறிக்கப்பட்டுள்ளது. 5 வரிகளில் இக்கல்வெட்டு உள்ளது. 1865ம் ஆண்டில் சிதிலமடைந்த இக்கோயிலை புதுப்பித்து, முன்மண்டபம் கட்டிய செய்தியை குறிப்பிடுகிறது. அய்யனார் கோயிலை கிபி 1529ம் ஆண்டு கட்டிய சின்னாபூசாரியின் சிலை இங்கு அடையாளம் காணப்பட்டுள்ளது. அய்யனார் கோயில் கட்டப்பட்டபோது ஆட்சியில் இருந்த ஆயக்குடி ஜமீன்தார் குமார கொண்டம நாயக்கர் தனது மனைவியுடன் உள்ள சிலையும் அடையாளம் காணப்பட்டுள்ளது. இங்குள்ள கல்வெட்டுகளில் அய்யனாரப்பன் உக்கிரமுள்ளவர் என்றும், புலிவாகனன் என்றும், கையில் பிறந்தவர் என்றும், அரிகரண் புத்திரம் என்றும் குறிப்பிடுகிறது. இவ்வாறு அவர் கூறினார். 

Source: Dinakaran

More from செய்திகள்More posts in செய்திகள் »
More from தமிழகம்More posts in தமிழகம் »