ராஜபாளையம்: ராஜபாளையம் நகரில் உள்ள அனைத்து வார்டுகளிலும் பாதாளச் சாக்கடை திட்டப்பணிகள் கடந்த ஓராண்டாக நடந்து வருகின்றன. இதற்காக ஆங்காங்கே பள்ளங்கள் தோண்டப்பட்டுள்ளன. இந்நிலையில், பணிகளை விரைவாக முடிக்காமல் இழுப்பதால், பள்ளங்களில் வாகன ஓட்டிகள், பொதுமக்கள், கால்நடைகள் விழுந்து காயமடையும் சம்பவங்கள் நடந்து வருகின்றன. இது குறித்து நகராட்சி அதிகாரிகளிடம் பொதுமக்கள் பலமுறை எடுத்துக் கூறியும், பணிகளை விரைவாக முடிக்க நடவடிக்கை இல்லை என புகார் கூறுகின்றனர்.
இந்நிலையில், தர்மாபுரம் நடுத்தெருவில் உள்ள பாதாளச் சாக்கடை திட்ட தொட்டி அமைப்பதற்காக பள்ளம் தோண்டியுள்ளனர். இந்த பள்ளத்தில் 2 பசுமாடுகள் விழுந்து, பொதுமக்களே காப்பாற்றினர். சில சமயங்களில் பொதுமக்களும் தவறி விழுந்து காயமடைந்த சம்பவங்களும் நடந்துள்ளன. எனவே, ராஜபாளையத்தில் பாதாளச் சாக்கடை திட்டப்பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
Source: Dinakaran