இந்தியா – நியூசிலாந்து இடையேயான முதல் ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி அபார வெற்றி பெற்றது. இந்திய அணி நிர்ணயித்த 348 ரன்கள் என்ற கடினமான இலக்கை 49வது ஓவரிலேயே அடித்து நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது.
3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 1-0 என நியூசிலாந்து அணி முன்னிலை வகிக்கிறது. எனவே தொடரை வெல்லும் வாய்ப்பை தக்கவைக்க வெற்றி பெற்றே தீர வேண்டிய கட்டாயத்தில் இரண்டாவது போட்டியில் ஆடிவருகிறது இந்திய அணி.
இரண்டாவது போட்டி ஆக்லாந்தில் நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி நியூசிலாந்தை முதலில் பேட்டிங் செய்ய பணித்ததையடுத்து, நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் ஆடிவருகிறது. இந்த போட்டியில் இந்திய அணி இரண்டு மாற்றங்களுடன் களமிறங்கியுள்ளது.
முதல் போட்டியில் 10 ஓவர்கள் வீசி 84 ரன்களை வாரி வழங்கிய குல்தீப் யாதவ் நீக்கப்பட்டு, அவருக்கு பதிலாக சாஹல் சேர்க்கப்பட்டுள்ளார். அதேபோல டெஸ்ட் தொடரில் ஷமி ஆட வேண்டும் என்பதால், தொடர்ந்து ஆடிக்கொண்டிருக்கும் அவருக்கு, உடற்தகுதியை கருத்தில் கொண்டு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. அவருக்கு பதிலாக நவ்தீப் சைனி சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்திய அணி:
பிரித்வி ஷா, மயன்க் அகர்வால், விராட் கோலி(கேப்டன்), ஷ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல்(விக்கெட் கீப்பர்), கேதர் ஜாதவ், ஜடேஜா, சாஹல், ஷர்துல் தாகூர், நவ்தீப் சைனி, பும்ரா.
Source: AsianetTamil