Press "Enter" to skip to content

ஏழு பேர் விடுதலை விவகாரம்… அதிமுக அரசுக்கு உச்ச நீதிமன்றம் குட்டு… விடுதலையை விரைவுப்படுத்த மு.க. ஸ்டாலின்

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரின் விடுதலையை விரைவுபடுத்த வேண்டும் என்று திமுக  தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கடந்த 29 ஆண்டுகளாக பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி உள்பட ஏழு பேர் சிறையில் இருந்துவருகிறார்கள். இவர்கள் எழுவரையும் முன்கூட்டியே விடுதலை செய்ய தமிழக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றியது. அந்தத் தீர்மானத்தை ஆளு நரின் ஒப்புதலுக்கும்  தமிழக அரசு அனுப்பி வைத்தது. ஆனால், தமிழக அரசின் தீர்மானத்தின் மீது எந்த முடிவையும் அறிவிக்காமல் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கிடப்பில் போட்டு வைத்துள்ளார்.


இந்த விவகாரத்தில் அதிமுக அரசும் அடுத்தகட்ட நடவடிக்கை எதையும் எடுக்கவில்லை என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டிவந்தன. இந்நிலையில், தண்டனையை நிறுத்தி வைக்கவும் கோப்புகளை ஆளுநர் நிலுவையில் வைத்திருப்பதை எதிர்த்தும் பேரறிவாளன்  தொடர்ந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, “இத்தனை மாதங்கள் கோப்புகளை நிலுவையில் வைத்திருப்பது ஏன்” என ஆளுநருக்கு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். “இதற்கான பதிலை ஆளுநரிடமிருந்து தமிழக அரசு கேட்டுப்பெற வேண்டும். இதை நீதிமன்றம் கேட்காது”என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.


இதனையடுத்து, இரு வாரங்களுக்கு வழக்கு விசாரணையை ஒத்திவைத்த உச்ச நீதிமன்றம்,  “ஆளுநரிடமிருந்து பதிலை பெற்று அதை நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கின் விசாரணையை ஒத்திவைத்தனர். இந்நிலையில், ஏழு பேர் விடுதலை குறித்து தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதை வரவேற்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.
அதில், “பேரறிவாளன் உள்ளிட்டோரை விடுதலை செய்வதற்கு தமிழக அமைச்சரவை நிறைவேற்றி அனுப்பிய தீர்மானத்தின் மீது ஆளுநர் எடுத்துள்ள நடவடிக்கை குறித்து கேட்டு, இரு வாரத்தில் பதில் மனுதாக்கல் செய்யுமாறு அதிமுக அரசுக்கு உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது வரவேற்கத்தக்கது. அமைச்சரவை தீர்மானம் மற்றும் மாநில உரிமை பற்றி சிறிதும் கவலைப்படாமல் இருந்த அதிமுக அரசிற்கு உச்சநீதிமன்றம் “குட்டு” வைத்துள்ளது.
எனவே இனியாவது உடனடியாக அமைச்சரவை தீர்மானத்திற்கு ஒப்புதல் கொடுங்கள் என்று ஆளுநரை வலியுறுத்தி, பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரின் விடுதலையை விரைவுபடுத்த வேண்டும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியைக் கேட்டுக் கொள்கிறேன்” என மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

Source: AsianetTamil

More from செய்திகள்More posts in செய்திகள் »