தமிழக பட்ஜெட் நாளை தாக்கலாக உள்ள நிலையில் பல புதிய அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத் தொடர் நாளை தொடங்குகிறது . நாளை காலை 10 மணிக்கு சட்டசபை தொடங்கியவுடன் , நிதியமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் 2020 மற்றும் 2021ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். தமிழக சட்டசபையில் 2020 ஆம் ஆண்டுக்கான முதல் கூட்டத்தொடர் ஜனவரி 6ஆம் தேதி முதல் 9 தேதி வரை நடைபெற்றது , இந்நிலையில் தமிழக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத் தொடர் நாளை காலை 10மணிக்கு தொடங்குகிறது .
அடுத்த ஆண்டுக்கான சட்டசபை பொதுத்தேர்தல் மே மாதம் நடைபெற உள்ளதால் அதை மனதில் வைத்து இந்த பட்ஜெட் அமையும் என்றும் , பல புதிய அறிவிப்புகள் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது . குறிப்பாக குடிமராமத்து பணிகளுக்கு அதிக வரவேற்பு உள்ளதால் இந்த பட்ஜெட்டில் போதிய நிதி ஒதுக்க வாய்ப்புள்ளது என கூறப்படுகிறது. அதேபோல் சென்னை நகருக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளுக்கு இணையாக தேர்வாய் கண்டிகையில் புதிய நீர்பிடிப்பு ஏரி உருவாக்கப்பட்டு வருவதற்கு , இந்த பட்ஜெட்டில் கூடுதல் நிதி ஒதுக்க வாய்ப்புள்ளது . புதிதாக பிரிக்கப்பட்ட மாவட்டங்களான தென்காசி , கள்ளக்குறிச்சி , செங்கல்பட்டு , திருப்பத்தூர் , ராணிப்பேட்டை , மாவட்டங்களுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கட்டுவதற்காக இந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் நிதி ஒதுக்கப்படும் என தெரிகிறது .
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவது தொடர்பான அறிவிப்புகளும் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பிறகு சபையில் அலுவல் ஆய்வுக்குழு கூடி பட்ஜெட் மீதான விவாதத்தை எத்தனை நாட்கள் நடத்துவது என முடிவு செய்யப்பட உள்ளது. பட்ஜெட் மீதான விவாதத்தில் குரூப்-1 தேர்வில் முறைகேடு , குடியுரிமை திருத்த சட்ட பிரச்சினை , உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன . ஆகவே இந்த கூட்டத்தொடர் மிகவும் பரபரப்பாக இருக்கும் என தெரிகிறது . அதிமுக ஆட்சி காலம் அடுத்த ஆண்டு மே மாதம் நிறைவடைய உள்ளது அதன்பிறகு பொதுத் தேர்தல் நடைபெறும் இதனால் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்ய முடியும் , எனவே நாளை தாக்கல் செய்யப்படும் பட்ஜெட்தான் அதிமுக ஆட்சியின் முழு பட்ஜெட் ஆக இருக்கும் என்பது குறிப்பிடதக்கது.
Source: AsianetTamil