Press "Enter" to skip to content

டெல்லியில் கட்டிடங்கள் கட்ட விதிக்கப்பட்ட தடை முழுவதும் நீக்கம் – சுப்ரீம் கோர்ட்

காற்று மாசுபாடு காரணமாக டெல்லியில் கட்டிடப்பணிகள் மேற்கொள்ள விதிக்கப்பட்டிருந்த தடை முழுவதும் நீக்கப்படுவதாக சுப்ரீம் கோர்ட் நேற்று அறிவித்தது.

புதுடெல்லி:

தலைநகர் டெல்லியில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் காற்று மாசுபாரு மிகவும் அபாய அளவை தாண்டியிருந்தது. குறிப்பாக  தீபாவளி பண்டிகைக்கு பின்னர் மிகவும் அபாய நிலைக்கு சென்ற காற்றின் தரம் மனிதர்கள் சுவாசிக்க தகுதியற்ற அளவிற்கு சென்றது.

இதையடுத்து நவம்பர் 1-ம் தேதி டெல்லியில் மருத்துவ அவசர நிலை அறிவிக்கப்பட்டது. இதனால் கனரக வாகனங்கள் மற்றும் அதிக புகையை வெளியிடும் தொழிற்சாலைகளின் இயக்கம் நிறுத்தப்பட்டது. 

பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டது. அண்டைமாநிலமான பஞ்சாப்பில் விவசாயிகள் பயிர்களின் கழிவுகளை தீயிட்டு எரிக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது. 

அதேபோல் டெல்லி முழுவதும் புதிதாக கட்டிடங்கள் கட்டுதல், பழைய கட்டிடங்களை இடித்தல் உள்ளிட்ட அனைத்து கட்டிட பணிகளுக்கும் தடை விதித்து கடந்த நவம்பர் 4-ம் தேதி சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்தது. 

இதுபோன்ற நடவடிக்கைகளால் காற்றின் தரம் சற்று உயர்ந்ததையடுத்து  காலை 6 மணி முதல் மாலை 6 வரை டெல்லியில் கட்டிட பணிகளில் ஈடுபடலாம் எனவும் இரவு நேரங்களில் கட்டிட பணிகள் செய்யக்கூடாது எனவும் டிசம்பர் 9-ம் தேதி சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வழங்கியது.

இந்நிலையில், இது தொடர்பான வழக்கு நேற்று சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் தலைநகரில் தற்போது காற்றின் தரம் நன்கு உயந்துள்ளதால் இரவு நேரங்களில் டெல்லியில் கட்டிட வேலைகளில் ஈடுபடக்கூடாது என விதிக்கப்பட்ட தடை உத்தரவை ரத்து செய்தனர். 

தடை உத்தரவு திரும்பப்பெறப்பட்டதையடுத்து தலைநகரில் இனி 24 மணி நேரமும் கட்டிட பணிகளில் ஈடுபடலாம் என்பது குறிப்பிடத்தக்கது. 

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »