Press "Enter" to skip to content

பாகிஸ்தானில் காஷ்மீர் குறித்த பேச்சு – துருக்கி அதிபருக்கு இந்தியா கண்டனம்

பாகிஸ்தானில் பயணம் மேற்கொண்டபோது ஜம்மு காஷ்மீர் குறித்து துருக்கி அதிபர் எர்டோகன் தெரிவித்த கருத்துக்களுக்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது.

புதுடெல்லி:

துருக்கி அதிபர் ரீசெப் தயீப் எர்டோகன் இருநாள் பயணமாக பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளார். அங்கு அவர் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை சந்தித்தார். அப்போது, காஷ்மீர் பிரச்சனையில் பாகிஸ்தானின் நிலைப்பாட்டிற்கு தனது நாடு ஆதரவளிப்பதாக தெரிவித்திருந்தார்.

கடந்த ஆண்டு ஆகஸ்டில் ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததைக் குறிப்பிட்டு பேசிய எர்டோகன், எங்கள் காஷ்மீர் சகோதர சகோதரிகள் பல தசாப்தங்களாக அசவுகரியங்களால் பாதிக்கப்பட்டுள்ளனர், சமீபத்திய காலங்களில் ஒருதலைப்பட்சமாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளால் இந்த துன்பங்கள் மிகவும் மோசமாகிவிட்டன. காஷ்மீர் பிரச்சனையை தீர்ப்பதில் துருக்கி நீதி, அமைதி மற்றும் பேச்சுவார்த்தையில் தொடர்ந்து துணை நிற்கும் என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், ஜம்மு காஷ்மீர் குறித்த துருக்கி அதிபர் எர்டோகன் தெரிவித்த கருத்துக்களுக்கு இந்தியா பதிலடி கொடுத்துள்ளது.

இதுதொடர்பாக, வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமார் கூறியதாவது:

துருக்கியின் ஜம்மு காஷ்மீர் பற்றிய அனைத்து கருத்துக்களையும் நிராகரிக்கிறோம். இது இந்தியாவின் ஒருங்கிணைந்த மற்றும் அழிக்க முடியாத பகுதியாகும்.

இந்தியாவின் உள் விவகாரங்களில் தலையிட வேண்டாம். பாகிஸ்தானில் இருந்து இந்தியாவிற்கும் அதன் பிராந்தியத்திற்கும் பயங்கரவாதத்தால் ஏற்பட்டுள்ள  கடுமையான அச்சுறுத்தல் உள்ளிட்ட உண்மைகளைப் பற்றிய சரியான புரிதலை வளர்த்துக் கொள்ளவும் துருக்கி அதிபருக்கு  நாங்கள் அழைப்பு விடுக்கின்றோம் என தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு செப்டம்பரில் அதிபர் எர்டோகன் காஷ்மீர் பிரச்சனையை ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையில் எழுப்பி உரையாற்றினார். ஐ.நாவில் அவர் கூறிய கருத்துக்களுக்கு பதிலளித்த இந்தியா, காஷ்மீர் பிரச்சனையில் துருக்கியின் அறிக்கை ஆழ்ந்த வருத்தம்  அளிக்கிறது. அது ஒரு உள் நாட்டு விஷயம் என கூறியிருந்தது.

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »