இஸ்லாமியருக்கு மசூதி கட்டுவதற்காக மாநில அரசு வழங்கிய 5 ஏக்கர் நிலத்தை உத்தரபிரதேச சன்னி வக்பு வாரியம் நேற்று ஏற்றுக்கொண்டது.
லக்னோ:
உத்தரபிரதேசத்தின் அயோத்தியில் ராமர் கோவில் கட்டுதவற்கு அனுமதி அளித்த சுப்ரீம் கோர்ட்டு, அதற்கு பதிலாக இஸ்லாமியருக்கு மசூதி கட்டுவதற்காக 5 ஏக்கர் நிலம் வழங்கவும் அரசுக்கு உத்தரவிட்டது. அதன்படி அயோத்தியில் இருந்து 20 கி.மீ. தொலைவில் உள்ள தன்னிபூர் கிராமத்தில் மசூதி கட்டுவதற்காக 5 ஏக்கர் நிலத்தை மாநில அரசு கடந்த 5-ந்தேதி அளித்தது.
இதை ஏற்பது குறித்து நீண்ட பரிசீலனையில் ஈடுபட்டிருந்த உத்தரபிரதேச சன்னி வக்பு வாரியம், இந்த நிலத்தை நேற்று ஏற்றுக்கொண்டது. இதை தெரிவித்த வக்பு வாரிய தலைவர் ஜுபர் பரூக்கி, அங்கு மசூதி கட்டுவதற்காக அறக்கட்டளை அமைக்க இருப்பதாக கூறினார்.
அரசு வழங்கும் அந்த நிலத்தில் மசூதியுடன் இந்தோ-இஸ்லாமிய மையம், ஆஸ்பத்திரி, பொது நூலகம் ஆகியவையும் கட்டப்படும் என அவர் தெரிவித்தார். இந்த இஸ்லாமிய மையத்தில் இஸ்லாமிய நாகரிகம் குறித்த ஆய்வுப்பணிகள் நடைபெறும் எனவும் குறிப்பிட்டார்.
உத்தரபிரதேச சன்னி வக்பு வாரியம்தான், அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலத்தின் உரிமை தொடர்பான வழக்கின் முக்கிய மனுதாரர் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Source: Maalaimalar