Press "Enter" to skip to content

நீண்ட இழுபறிக்கு பிறகு இந்தியர்களை மீட்க நாளை சீனா செல்கிறது ராணுவ விமானம்

நீண்ட இழுபறிக்கு பின்னர் சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகம் உள்ள வுகான் நகரில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க ராணுவ விமானம் நாளை அங்கு செல்கிறது.

புதுடெல்லி:

சீனாவில் ஹுபேய் மாகாணம் வுகான் நகரில் இருந்து கடந்த டிசம்பர் மாதம் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவிவருகிறது. இந்த வைரசுக்கு சீனாவில் 2592 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 77 ஆயிரத்து 150 பேருக்கு வைரஸ் பரவியுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ள்னர்.

இதற்கிடையில், வைரஸ் தாக்குதல் அதிகம் உள்ள வுகான் நகருக்கு கல்வி, வேலைவாய்ப்பு, தொழில் நிமித்தமாக இந்தியர்கள் பலர் சென்றிருந்தனர். அவர்களை மீட்கும் முயற்சியில் இறங்கிய மத்திய அரசு ஏர்-இந்தியா சிறப்பு விமானத்தை வுகான் நகருக்கு இரண்டு முறை அனுப்பி 600-க்கும் அதிகமான இந்தியர்களை டெல்லிக்கு அழைத்து வந்தது.

நாடு திரும்பிய அனைவரும் டெல்லியில் உள்ள சிறப்பு மருத்துவ முகாமில் தங்க வைக்கப்பட்டனர். அவர்களுக்கு தொடர்ந்து மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு வைரஸ் பாதிப்பு இல்லை என உறுதி செய்யப்பட்ட பின்னர் வீடுகளுக்கு அனுப்பப்பட்டனர். 

ஆனாலும், வுகான் நகரில் 100-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் வெளியேற முடியாமல் தவித்து வருகிறார்கள். அவர்களையும் மீட்டு கொண்டுவர சி-17 குளோபல் மாஸ்டர் என்ற மிகப்பெரிய ராணுவ விமானத்தை அந்நாட்டின் வுகான் நகருக்கு மத்திய அரசு திட்டமிட்டிருந்தது. 

அந்த விமானத்தில் சீனாவுக்கு நட்பு ரீதியாக மருந்து பொருட்கள், மருத்துவ உபகரணங்களை கொண்டு செல்லவும் கடந்த 20-ம் தேதி மத்திய அரசு முன்வந்தது. 

ஆனால், ஜப்பான், உக்ரேன், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளை சார்ந்த விமானங்கள் வுகான் நகருக்குள் நுழைய சீன அரசு அனுமதி அளித்தபோது இந்திய விமானம் அங்கு செல்ல சீன அரசு அனுமதி மறுத்துவிட்டது. 

இதனால் ஆத்திரமடைந்த இந்திய அரசு சீனாவுக்கு ஒரு சில மருந்து பொருட்களை ஏற்றுமதி செய்ய நேற்று முன்தினம் தடைவிதித்தது.  

இந்நிலையில், வுகான் நகரில் உள்ள இந்தியர்களை சொந்த நாட்டிற்கு அழைத்துசெல்ல நீண்ட இடைவெளிக்கு பின்னர் சீன அரசு நேற்று அனுமதி வழங்கியுள்ளது. 

இதையடுத்து சீனாவுக்கு மருந்துபொருட்களை ஏற்றிக்கொண்டு இந்திய விமானப்படையின் மிகப்பெரிய ராணுவ விமானமான சி-17 குளோபல் மாஸ்டர் விமானம் வுகான் நகருக்கு நாளை செல்கிறது. இந்த விமானத்தை பயன்படுத்திய வுகானில் சிக்கியுள்ள 100-க்கும்  இந்தியர்கள் வரும் 27-ம் தேதி நாடு திரும்புவார்கள் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

    

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »