Press "Enter" to skip to content

டெல்லியில் தப்லிகி ஜமாத் நிகழ்ச்சியில் பங்கேற்ற பின்னர் 16 மசூதிகளில் தங்கிய நபர்கள் – அதிர்ச்சி தகவல்

நிஜாமுதீன் பகுதியில் உள்ள தப்லிகி ஜமாத் இஸ்லாமிய நிகழ்ச்சியில் பங்கேற்ற பின்னர் அதில் கலந்து கொண்டவர்களில் 157 பேர் டெல்லியில் உள்ள 16 மசூதிகளில் தங்கி இருந்த தகவல் வெளியாகியுள்ளது.

புது டெல்லி:

இந்தியா முழுவதும் இதுவரை ஆயிரத்து 238 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 35 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 123 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

இதற்கிடையே, தலைநகர் டெல்லியில் உள்ள நிஜாமுதீன் என்ற பகுதியில் கடந்த மாதம் 13 முதல் 15-ம் தேதி வரை தப்லிகி ஜமாத் என்ற இஸ்லாமிய மத அமைப்பு சார்பில் கூட்டம் நடைபெற்றது. 

இந்த கூட்டத்தில் இந்தியா மட்டுமல்லாமல் உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான இஸ்லாமிய மத குருக்கள் கலந்து கொண்டுள்ளனர். 

அந்த மதக்கூட்டத்தில் பங்கேற்ற நபர்கள் பலருக்கு தற்போது கொரோனா வைரஸ் பரவி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவ நிஜாமுதீன் பகுதியில் நடைபெற்ற மதக்கூட்டம் முக்கிய காரணமாக அமைந்துள்ளது.

இந்நிலையில், நிஜாமுதீன் பகுதியில் தப்லிகி ஜமாத் என்ற இஸ்லாமிய அமைப்பின் நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களில் 157 பேர் நிகழ்ச்சி முடிந்த பின்னர் டெல்லியின் பல்வேறு பகுதிகளில் உள்ள 16 மசூதிகளுக்கு சென்று அங்கு தங்கி இருந்தது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

நிஜாமுதீன் நிகழ்ச்சியில் பங்கேற்ற பின்னர் 157 பேர் டெல்லியின் தென்கிழக்கு, வடகிழக்கு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் உள்ள 16 மசூதிகளில் தங்கியுள்ளனர். 

அவ்வாறு தங்கியவர்களில் 94 பேர் இந்தோனேசியா, 13 பேர் கஜகஸ்தான், 9 பேர் பங்களாதேஷ், 8 பேர் மலேசியா, 7 பேர் அல்ஜீரியா மற்றும் இத்தாலி, துனிசியா,  பெல்ஜியம் தலா ஒருவர் என மொத்தம் 138 பேர் வெளிநாட்டினரும் எஞ்சிய 19 பேர் இந்தியர்கள் ஆவர்.

இதையடுத்து, டெல்லி சிறப்பு பிரிவு போலீஸ் இந்த விவகாரம் தொடர்பாக விரிவான விசாரணை நடத்தி வருகிறது. 

மேலும், ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள மசூதிகளுக்கு சென்று அங்கு தங்கியுள்ள வெளிநாட்டினரை உடனடியாக தனிமைப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்கவும் மாவட்ட நிர்வாகத்திற்கு சிறப்பு போலீஸ் பிரிவு அறிவுறுத்தியுள்ளது.

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »