அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 10 ஆயிரத்தை கடந்துள்ளது.
நியூயார்க்:
சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவியுள்ளது. உலகின் 202 நாடுகளுக்கு பரவியுள்ள இந்த வைரஸ் பெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகிறது.
தடுப்பு மருந்து கண்டுபிடிக்க பல்வேறு நாடுகளை சேர்ந்த விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வந்தாலும் வைரஸ் தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
உலகம் முழுவதும் 13 லட்சத்து 30 ஆயிரத்து 461 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் பரவியவர்களில் இதுவரை 73 ஆயிரத்து 870 பேர் உயிரிழந்துள்ளனர்.
சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட வைரஸ் ஐரோப்பிய நாடுகளை தொடர்ந்து தற்போது அமெரிக்காவில் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. அந்நாட்டில் கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 10 ஆயிரத்தை கடந்துள்ளது.
தற்போதைய நிலவரப்படி, அமெரிக்காவில் 3 லட்சத்து 56 ஆயிரத்து 653 பேருக்கு வைரஸ் பரவியுள்ளது. வைரஸ் பரவியவர்களில் 3 லட்சத்து 26 ஆயிரத்து 829 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், 19 ஆயிரத்து 308 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், அந்நாட்டில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 10 ஆயிரத்து 516 ஆக அதிகரித்துள்ளது.
இதனால் இத்தாலி, ஸ்பெயினுக்கு அடுத்தப்படியாக கொரோனாவுக்கு அதிக உயிரிழப்புகளை சந்தித்த நாடுகள் பட்டியலில் அமெரிக்கா (மூன்றாவது இடம்) உள்ளது.
Related Tags :
Source: Maalaimalar