இத்தாலியில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 20 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
ரோம்:
உலகம் முழுவதும் பரவியுள்ள கொரோனா வைரஸ் 210 நாடுகளுக்கு பரவியுள்ளது. இந்த கொடிய வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வரும் நிலையில் நாளுக்கு நாள் மனித உயிரிழப்புகள் அதிகரித்து கொண்டே செல்கிறது.
கொரோனா தாக்குதலுக்கு உலகம் முழுவதும் ஒரு லட்சத்து 18 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர். மேலும், 19 லட்சம் பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த வைரஸ் ஐரோப்பாவிலும், அமெரிக்காவிலும் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. வைரஸ் அதிகம் பரவியவர்களின் எண்ணிக்கையிலும், பலியானோர் எண்ணிக்கையிலும் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது.
இந்நிலையில், ஐரோப்பிய நாடான இத்தாலியில் வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 20 ஆயிரத்தை கடந்துள்ளது.
தற்போதைய நிலவரப்படி, அந்நாட்டில் ஒரு லட்சத்து 59 ஆயிரத்து 516 பேருக்கு வைரஸ் பரவியுள்ளது. குறிப்பாக நேற்று ஒரே நாளில் மட்டும் புதிதாக 3 ஆயிரத்து 153 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும், அந்நாட்டில் வைரஸ் தாக்குதலுக்கு நேற்று ஒரே நாளில் மட்டும் 566 பேர் உயிரிழந்தனர். இதனால் இத்தாலியில் கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 20 ஆயிரத்து 465 ஆக அதிகரித்துள்ளது.
அமெரிக்காவுக்கு (23,077 பேர்) அடுத்தபடியாக இத்தாலியில் கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 20 ஆயிரத்தை கடந்துள்ளதால் அந்நாட்டு மக்கள் கலக்கம அடைந்துள்ளனர்.
Related Tags :
Source: Maalaimalar