அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு நேற்று ஒரே நாளில் ஆயிரத்து 535 பேர் உயிரிழந்தனர்.
நியூயார்க்:
உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் 210 நாடுகளுக்கு பரவியுள்ளது. இந்த கொடிய வைரசின் தாக்கத்தால் பெரும் மனித உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகிறது.
உலகம் முழுவதும் 19 லட்சத்து 23 ஆயிரத்து 935 பேருக்கு வைரஸ் பரவியுள்ளது. வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை ஒரு லட்சத்து 19 ஆயிரத்து 618 பேர் பலியாகியுள்ளனர்.
இந்த கொடிய வைரஸ் பாதிப்பில் இருந்து 4 லட்சத்து 44 ஆயிரத்து 624 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து டிஸ்சாஜ் செய்யப்பட்டுள்ளனர்.
சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த கொடிய வைரஸ் ஐரோப்பிய நாடுகளை தொடர்ந்து தற்போது அமெரிக்காவில் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது.
உலக அளவில் அதிகம் வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கையிலும், பலியோனோர் எண்ணிக்கையிலும் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது.
தற்போதைய நிலவரப்படி, அமெரிக்காவில் 5 லட்சத்து 86 ஆயிரத்து 941 பேருக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளது. குறிப்பாக நேற்று ஒரே நாளில் மட்டும் புதிதாக 26 ஆயிரத்து 641 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும், அந்நாட்டில் வைரஸ் தாக்குதலுக்கு நேற்று ஒரே நாளில் மட்டும் ஆயிரத்து 535 பேர் பலியாகியுள்ளனர். இதனால் அமெரிக்காவில் கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 23 ஆயிரத்து 640 ஆக அதிகரித்துள்ளது.
அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்படுவோர் மற்றும் உயிரிழப்போரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால் அந்நாட்டு மக்கள் மிகுந்த கலக்கம் அடைந்துள்ளனர்.
Related Tags :
Source: Maalaimalar