Press "Enter" to skip to content

மே 3-ந்தேதி வரை நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு: பிரதமர் மோடி அறிவிப்பு

கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த மே 3-ந்தேதி வரை நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

புதுடெல்லி:

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் கடந்த 25-ந்தேதியில் இருந்து இன்று வரை 21 நாட்கள் நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இன்று நள்ளிரவுடன் 21 நாள் கெடு முடிவடைகிறது. ஆனால் நாம் நினைத்தது போன்று கொரோனா வைரஸ் கட்டுக்குகள் வரவில்லை.

இந்த 21 நாள் காலக்கட்டத்தில்தான் கொரோனா வைரசின் வீரியம் அதிகமாக இருந்து வருகிறது. இன்று காலை இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

இதனால் பெரும்பாலான மாநிலங்கள் ஊரடங்கு உத்தரவை நீட்டிக்க வேண்டும் என வலியுறுத்தியது. ஆனால் மத்திய அரசு இதுகுறித்து ஏதும் அறிவிப்பு வெளியிடவில்லை. இதனால் தமிழ்நாடு, புதுச்சேரி, டெல்லி, மகாராஷ்டிரா, ஒடிசா, ராஜஸ்தான், பஞ்சாப், தெலங்கானா போன்ற மாநிலங்கள் ஏப்ரல் 30-ந்தேதி வரை ஊரடங்கு உத்தரவை நீட்டித்தது.

இந்நிலையில் பிரதமர் மோடி இன்று காலை மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.

அப்போது பிரதமர் மோடி கூறியதாவது:-

1. மக்களின் ஒத்துழைப்பால் கொரோனாவை கட்டுப்படுத்த முடிந்தது.

2. கொரோனாவை ஒழிக்க நாட்டு மக்கள் அனைவரும் இணைந்து போராடி வருகிறோம்.

3. ஊரடங்கால் மக்களுக்கு ஏற்பட்ட சிரமங்களை என்னால் உணர முடிகிறது

4. மக்கள் அனைவரும் ராணுவ வீரர்கள் போன்று செயல்பட்டு வருகின்றனர். அவர்களைப் போன்று ஒழுக்கத்துடன் கண்ணியத்துடன் இருக்கிறார்கள்.

5. இந்தியாவில் கொரோனா வேகமாக பரவி வருகிறது.

6. வீட்டில் இருந்து நாட்டு மக்களை காப்பாற்றி இருக்கிறீர்கள்.

7. இந்தியா தைரியமாக கொரோனாவுக்கு எதிரான போரை எதிர்கொண்டு வருகிறது.

8. தமிழ்புத்தாண்டு உள்பட்ட பண்டிகைகளை வீட்டிற்குள்ளேயே இருந்து கொண்டாடும் நிலை ஏற்பட்டுள்ளது.

9. சவால் நிறைந்தது வாழ்க்கை என்பது சட்டமேதை அம்பேக்தரின் வாழ்க்கையே ஒரு உதாரணம்.

10. உலக நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியா சிறந்து விளங்குகிறது. கொரோனா வைரஸ் பரவல் கட்டுக்குள் இருக்கிறது.

11. உரிய நேரத்தில் உரிய நடவடிக்கை எடுக்காமல் இருந்திருந்தால் பாதிப்பு இன்னும் அதிகமாக இருந்திருக்கும்.

12. ஊரடங்கு தொடங்கும்போது 500 பேருக்கு தொற்று இருந்தது. நடவடிக்கை எடுக்காவிடில் எண்ணிப்பார்க்க முடியாது விளைவு ஏற்பட்டிற்கும்.

13. தனி மனித இடைவேளி முக்கிய பங்கு வகிக்கிறது.

14. பொருளாதார ரீதியாக வீழ்ச்சி அடைந்தாலும் உயிர் இழப்பை தடுத்துள்ளோம்.

15. கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கை நீட்டிக்க வேண்டியது அவசியமாக உள்ளது. இதனால் மே 3-ந்தேதி வரை நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படுகிறது. தற்போதுள்ள வழிமுறையாக கடைபிடிக்க வேண்டும்.

இவ்வாறு பிரதமர் மோடி தனது உரையில் தெரிவித்துள்ளார்.

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »