ஊரடங்கு காரணமாக மே 3-ம் தேதி வரை பயணிகள் ரெயில் சேவைகள் ரத்து செய்யப்படுவதாக இந்திய ரெயில்வே அறிவித்துள்ளது.
புதுடெல்லி:
சீனாவில் கண்டுபிடிக்கப்பட்டு உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது.
நாடு முழுவதும் 10 ஆயிரத்து 815 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 353 பேர் பலியாகியுள்ளனர்.
இதற்கிடையில், வைரஸ் தாக்குதலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் மார்ச் 25 முதல் வரை 21 நாட்களுக்கு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக பிரதமர் மோடி அறிவித்தார். இதையடுத்து, நாடு முழுவதும் உள்ள அனைத்து பயணிகள் ரெயில் சேவைகளும் ரத்து செய்யப்பட்டது.
இந்நிலையில், பிரதமர் மோடி அறிவித்த 21 நாட்கள் நாடு தழுவிய ஊரடங்கு நேற்றுடன் (ஏப்ரல் 14) நிறைவடைந்தது. ஆனால், நேற்று காலை 10 மணிக்கு நாட்டு மக்களிடம் தொலைக்காட்சி வாயிலாக உரையாடிய பிரதமர் ஊரடங்கு மே 3-ம் தேதி வரை மேலும் நீட்டிக்கப்படுவதாக அறிவித்தார்.
இதையடுத்து, ஊரடங்கு முடியும் வரை (மே – 3) நாடு முழுவதும் அனைத்து பயணிகள் ரெயில் சேவைகளும் ரத்து செய்யப்படுவதாக இந்திய ரெயில்வே அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.
மேலும், ஏற்கனவே முன்பதிவு செய்யப்பட்டுள்ள டிக்கெட்டுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு முன்பதிவு செய்த பயணிகளுக்கு முழு தொகையும் அவர்களின் சம்மந்தப்பட்ட வங்கி கணக்கில் திருப்பி செலுத்தப்படும் என ரெயில்வே தெரிவித்துள்ளது.
ஊரடங்கு அமலில் உள்ள மே 3-ம் தேதி வரை எந்த வித சிறப்பு பயணிகள் ரெயிலும் இயக்கப்படாது எனவும், சரக்கு ரெயில்கள் மட்டுமே இயக்கப்படும் எனவும் ரெயில்வே தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Source: Maalaimalar