கொரோனா வைரசின் தாக்குதல் இன்னும் குறையாத நிலையில் நியூயார்க் மாகாணத்தில் மே 15-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
நியூயார்க்:
சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் உலகையே உலுக்கு வருகிறது.
குறிப்பாக அமெரிக்காவில் இந்த வைரஸ் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது.
அந்நாட்டில் இதுவரை 6 லட்சத்து 74 ஆயிரம் பேருக்கு வைரஸ் பரவியுள்ளது. மேலும், வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 34 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.
அமெரிக்காவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாகாணமாக நியூயார்க் உள்ளது.
தற்போதைய நிலவரப்படி, நியூயார்க்கில் 2 லட்சத்து 26 ஆயிரத்து 198 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை அங்கு 16 ஆயிரத்து 106 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதற்கிடையில், கொரோனாவின் பிடியில் சிக்கியுள்ள நியூயார்க் மாகாணத்தில் அவசர நிலை பிரகனம் செய்யப்பட்டு ஊரடங்கு அமலில் உள்ளது.
இதையடுத்து, அனைத்து பள்ளிகளும் மூடப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்யும் வணிக நிறுவனங்களை தவிர பிற நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது. ஆனால், தற்போது அமலில் உள்ள ஊரடங்கு வரும் 29-ம் தேதியுடன் (ஏப்ரல் 29) முடிவுக்கு வர உள்ளது.
இந்நிலையில், கொரோனா வைரசின் தாக்கம் குறையாத நிலையில் நியூயார்க் மாகாணத்தில் அமலில் உள்ள ஊரடங்கை மே 15-ம் தேதி வரை நீட்டித்து அம்மாகாண கவர்னர் ஆண்ட்ரூ குவோமோ உத்தரவிட்டுள்ளார்.
Related Tags :
Source: Maalaimalar