கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ரஷியாவில் நடைபெற இருந்த வெற்றி நாள் கொண்டாட்டத்தை அதிபர் புதின் தள்ளிவைத்தார்.
மாஸ்கோ:
இரண்டாம் உலகப் போரில் ஹிட்லரின் தலைமையிலான ஜெர்மன் நாசிப் படையை ரஷியாவின் ஸ்டாலின் தலைமையிலான செம்படைகள் 1945-ம் ஆண்டு மே 9-ம் தேதி தோற்கடித்தன.
இரண்டாம் உலகப்போர் முடிவுக்கு வருவதற்கான முக்கிய காரணங்களில் ஒன்றான இந்த வெற்றியை, ஆண்டுதோறும் ரஷியா வெற்றி நாளாக கடைபிடிக்கிறது.
இந்த வெற்றி நாள் கொண்டாட்டத்தின் போது ரஷியாவின் ஆயுத வலிமையை வெளிப்படுத்தும் வகையாக ராணுவ ராணுவ அணிவகுப்புகள் நடைபெறும்.
இந்த பிரம்மாண்ட நிகழ்ச்சியில் உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த தலைவர்களும் பங்கேற்பது வழக்கம். அதேபோல், இந்த ஆண்டு நாசிப் படைகள் தோற்கடிப்பட்டதன் 75-வது ஆண்டு விழாவை கொண்டாட ரஷியா தயாராகி வந்தது.
இதற்கிடையில், உலகையே உலுக்கி வரும் கொரோனா ரஷியாவிலும் பரவி வருகிறது. தற்போதைய நிலவரப்படி, ரஷியாவில் 27 ஆயிரத்து 938 பேருக்கு வைரஸ் பரவியுள்ளது. மேலும், அந்நாட்டில் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 232 பேர் பலியாகியுள்ளனர்.
இந்நிலையில், வைரசின் தாக்கம் தீவிரமடைந்து வருவதால் ரஷியாவில் அடுத்த மாதம் 9-ம் தேதி நடைபெற இருந்த 75-வது ஆண்டு வெற்றி நாள் கொண்டாட்டத்தை தள்ளிவைப்பதாக அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புதின் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Source: Maalaimalar