Press "Enter" to skip to content

நாளை முதல் இயங்கும் தொழில்கள் எவை? – மத்திய அரசு பட்டியலை வெளியிட்டது

நாளை முதல் இயங்கும் தொழில்கள் எவை, எவை என்பது குறித்து மத்திய அரசு பட்டியலை வெளியிட்டுள்ளது.

புதுடெல்லி:

இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் தீவிரமாக உள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை 15 ஆயிரத்தை நெருங்கி வரும் நிலையில், பலி எண்ணிக்கையும் 500-ஐ எட்டுகிறது.

வைரஸ் பரவலை கட்டுப்படுத்த ஏற்கனவே நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்டிருந்த ஊரடங்கு மே 3-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை பிரதமர் மோடி அண்மையில் வெளியிட்டார்.

அப்போது, அவர் கொரோனா பாதிப்பு அதிகம் இல்லாத பகுதிகளில் வருகிற 20-ந்தேதி முதல் நிபந்தனையுடன் சில தளர்வுகள் அளிக்கப்படும் என தெரிவித்தார்.

இந்த நிலையில் 20-ந்தேதி (நாளை) முதல் செயல்பாட்டிற்கு வரும் சேவைகள், தொழில்களின் பட்டியலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இதனை மத்திய மந்திரி ரவிசங்கர் பிரசாத் டுவிட்டரில் வெளியிட்டுள்ளார். அதன் விவரம் பின்வருமாறு:-

* ஆயுஷ் உள்பட அனைத்து மருத்துவ சேவைகள் செயல்படும்.

* வேளாண் மற்றும் தோட்டத் தொழில்களுக்கு அனுமதி.

* மீன்பிடித் தொழில் தொடர்ந்து இயங்கும்.

* தேயிலை, காப்பி, ரப்பர் தோட்டத் தொழில்கள், அதிகபட்சம் 50 சதவீத ஊழியர்களுடன் செயல்படலாம்.

* நிதித்துறை மற்றும் சமூக நலத்துறை செயல்படும்.

* தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம் தொடரும். இதில் ஊழியர்கள் முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும்.

* பொது வினியோகத்துறை செயல்படும்.

* மாநிலங்கள், மாவட்டங்களுக்கு இடையேயான சரக்கு போக்குவரத்துக்கு அனுமதி.

* ஆன்லைன் மூலம் கற்பித்தல் மற்றும் தொலைதூர கல்விக்கு அனுமதி.

*அத்தியாவசிய பொருட்கள் வினியோகம் செய்யலாம்.

* வர்த்தகம், தனியார் நிறுவனங்கள் கட்டுப்பாடுகளுடன் இயங்கலாம்.

* கட்டிட தொழில்களை தொடர அனுமதி.

* தனியார் வாகனங்களை மருத்துவம் உள்ளிட்ட அவசர தேவைக்காக இயக்கலாம்.

* அனைத்து மத்திய, மாநில, யூனியன் பிரதேச அலுவலகங்கள் செயல்படும்.

இந்த அறிவிப்புகள் கொரோனா பாதிப்பு தீவிரமாக உள்ள பகுதிகளுக்கு (ஹாட்ஸ்பாட்) பொருந்தாது என ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »