Press "Enter" to skip to content

விஜயகாந்துக்கு முகசவரம் செய்து, ‘டை’ அடித்து அழகுபடுத்திய மனைவி – டுவிட்டரில் காணொளி பதிவு

ஊரடங்கு உத்தரவால் வீட்டிலேயே முடங்கி இருக்கும் நடிகரும், தே.மு.தி.க. தலைவருமான விஜயகாந்துக்கு, அவரது மனைவி பிரேமலதா முகசவரம் செய்து, ‘டை’ அடித்து அழகுபடுத்தும் வீடியோ காட்சி டுவிட்டரில் வெளியாகியுள்ளது.

சென்னை:

பிரபல நடிகரும், தே.மு.தி.க. தலைவருமான விஜயகாந்த், சென்னை சாலிகிராமத்தில் உள்ள இல்லத்தில் ஓய்வு எடுத்து வருகிறார். கொரோனா நோய்த்தொற்று காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், கடந்த 20 நாட்களுக்கு மேலாக வீட்டிலேயே முடங்கி இருக்கும் விஜயகாந்த், தனது டுவிட்டர் பக்கத்தில் நேற்று 2 நிமிடம் 20 நொடிகள் ஓடும் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

“கொரோனா வைரஸ் ஊரடங்கு காலத்தில் நான் எனது இல்லத்தில்” என்று தலைப்பிட்டு வெளியிடப்பட்டுள்ள அந்த வீடியோவில், அவரது மனைவியும், தே.மு.தி.க. பொருளாளருமான பிரேமலதா, விஜயகாந்துக்கு முகசவரம் (சேவிங்) செய்து அழகுபடுத்துகிறார்.

பின்னர், தலைக்கு ‘டை’ அடித்து முடியை கருமையாக்கிய பிறகு, கை மற்றும் கால் நகங்களை வெட்டி சரிசெய்கிறார். பிறகு, காலில் ஏற்பட்ட பழைய காயத்தின் தழும்புகளை காட்டி, “இது சினிமாவில் சண்டை காட்சியின்போது ஏற்பட்ட வீரத் தழும்புகள். ஒவ்வொரு தழும்புக்கும் பின்னால் ஒரு வரலாறு இருக்கிறது” என்று பிரேமலதா விளக்கம் கூறுகிறார்.

வீடியோவில் விஜயகாந்த் உற்சாகமாக காட்சி தருகிறார். இந்தப் பதிவை டுவிட்டரில் பார்த்த விஜயகாந்தின் ரசிகர்களும், தே.மு.தி.க. தொண்டர்களும் உற்சாகம் அடைந்துள்ளனர். 

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »