Press "Enter" to skip to content

12 ஆயிரம் பேரை பணி நீக்கம் செய்ய விமான நிறுவனம் முடிவு – ஊழியர்கள் அதிர்ச்சி

கொரோனா வைரசால் பெரும் நஷ்டத்தை சந்தித்து வரும் பிரிட்டிஷ் ஏர்வேஸ் தனது ஊழியர்களில் 12 ஆயிரம் பேரை பணி நீக்கம் செய்ய முடிவு செய்துள்ளது.

லண்டன்:

உலகம் முழுவதும் 210 நாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸ் 31 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு பரவியுள்ளது. இந்த வைரஸ் தாக்குதலுக்கு 2 லட்சத்து 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

வைரஸ் தாக்கம் காரணமாக உலகின் பல்வேறு நாடுகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும், உள்நாட்டு மற்றும் பன்னாட்டு பயணிகள் விமான சேவை உள்பட அனைத்து விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது.  

இதனால் விமான நிறுவனங்கள் பெரும் நஷ்டத்தை சந்தித்து வருகிறது.  விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுளதால் பெரும்பாளான ஊழியர்களுக்கு விடுப்பு வழங்கப்பட்டுள்ளது. 

இதற்கிடையில், இங்கிலாந்தை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமான நிறுவனமும் கொரோனா காரணமாக பெரும் நஷ்டத்தை சந்தித்து வருகிறது. 

உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் தனது சேவையை மேற்கொண்டு வரும் பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனத்தில் சுமார் 45 ஆயிரம் ஊழியர்கள் வேலை செய்து வருகின்றனர்.

இந்நிலையில், கொரோனா காரணமாக பெரும் இழப்பை சந்தித்து வரும் அந்நிறுவனம் நிலைமையை கட்டுப்படுத்த விமானிகள் உள்பட தனது ஊழியர்களில் 12 ஆயிரம் பேரை பணி நீக்கம் செய்ய முடிவு செய்துள்ளது. 

பிரிட்டிஷ் ஏர்வேசின் தலைமை நிறுவனமான சர்வதேச விமான போக்குவரத்து குழுமத்தின் முக்கிய அதிகாரிகள் நடத்திய ஆலோசனையில் நிறுவனத்தின் நிதி நெருக்கடியை சமாளிக்கவே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

12 ஆயிரம் பேரை பணி நீக்கம் செய்ய நிறுவனம் முடிவு செய்துள்ளதால் பிரிட்டிஷ் ஏர்வேசில் வேலை செய்துவந்த ஊழியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »