ஊரடங்கு நீடிக்கப்பட்டதன் எதிரொலியாக, இந்தியாவில் உள்நாட்டு மற்றும் சர்வதேச விமான சேவைகளுக்கு மே 17-ம் தேதி வரை தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி:
கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது.
இதற்கிடையே, இந்த ஊரடங்கு உத்தரவை மே 17-ம் தேதி வரை நீட்டித்து மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டது.
இந்நிலையில், ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டதன் எதிரொலியாக உள்நாட்டு மற்றும் சர்வதேச விமான சேவைகள் ரத்து செய்யப்படுவதாக விமானப் போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக, மத்திய விமான போக்குவரத்து இயக்குநரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய அரசு ஊரடங்கு உத்தரவை மே 17-ம் தேதி வரை நீட்டித்துள்ளது. இதையடுத்து, உள்நாட்டு பயணிகள் விமான சேவை மே 17-ம் தேதி நள்ளிரவு 11.59 மணி வரை ரத்து செய்யப்படுகிறது. ஏற்கனவே ஏப்ரல் 14-ம் தேதி பிறப்பித்த உத்தரவுகள் அனைத்தும் மே 17ம் தேதி நள்ளிரவு 11.59 மணி வரை நீட்டிக்கப்படுகிறது. எனவே, அதுவரை சர்வதேச விமான சேவை ரத்து செய்யப்படுகிறது.
இந்த உத்தரவு சர்வதேச சரக்கு விமானச் சேவைக்கும், சிறப்பு அனுமதி பெற்று இயக்கப்படும் விமான சேவைக்கும் பொருந்தாது. உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானச் சேவை தொடங்கும் தேதி முன்கூட்டியே அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Source: Maalaimalar