Press "Enter" to skip to content

மீண்டும் டாஸ்மாக் கடைகள் திறப்பு- டோக்கன் மூலம் மது பானங்கள் விற்பனை

உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்ததையடுத்து தமிழகத்தில் இன்று கொரோனா பாதிப்பு இல்லாத இடங்களில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன.

மதுரை:

தமிழகத்தில் ஊரடங்கு தளர்த்தப்பட்டு, மே 7ம் தேதி திறக்கப்பட்ட டாஸ்மாக் மதுக்கடைகள், மே 8ம் தேதி மாலையுடன் மூடப்பட்டன. சென்னை ஐகோர்ட் உத்தரவின் காரணமாக கடைகள் மூடப்பட்டன. இந்த உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது. இதையடுத்து தமிழகத்தில் இன்று டாஸ்மாக் கடைகளை திறக்க தமிழக அரசு முடிவு செய்தது. அதன்படி கொரோனா தொற்று அதிகமுள்ள பகுதிகள், தொற்று ஏற்படும் அபாயம் உள்ள பகுதிகள் தவிர பிற இடங்களில், ஒரு வாரத்திற்கு பிறகு இன்று காலை 10 மணிக்கு டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன.

கடைகளில் கூட்டம் கூடுவதை தவிர்ப்பதற்காக, சிவப்பு, மஞ்சள், பச்சை உள்ளிட்ட 7 வண்ணங்களில் டோக்கன் வழங்கப்பட்டது. டோக்கன் வாங்குவதற்காக காலையிலேயே டாஸ்மாக் கடைகள் முன்பு குடிமகன்கள் குவிந்தனர். அவர்களுக்கு உடனுக்குடன் டோக்கன் வழங்கப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டனர். 

பின்னர் 10 மணிக்கு கடைகள் திறக்கப்பட்டதும், நீதிமன்ற வழிகாட்டுதலின்படி சமூக இடைவெளியை பின்பற்றி மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டன. 

டாஸ்மாக் கடைகள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை திறக்கப்படும் என்றும், நாளொன்றுக்கு ஒரு கடையில் 500 டோக்கன்கள் மட்டுமே வழங்கப்படும் என்றும் டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும் கடைக்கு வரும் அனைவரும் முகக்கவசம் கண்டிப்பாக அணிய வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகள் மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோல் மற்ற மாவட்டங்களில் பாதிப்பு நிலவரம், சட்டம் ஒழுங்கு நிலவரத்திற்கு ஏற்ப அந்தந்த மாவட்ட நிர்வாகம், டாஸ்மாக் கடைகளை திறக்க அனுமதி அளித்துள்து. 

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »