Press "Enter" to skip to content

சாலையில் நடந்து சென்ற புலம்பெயர் தொழிலாளர்களை சந்தித்து பேசிய ராகுல் காந்தி

டெல்லியில் சாலை வழியாக சொந்த ஊர்களுக்கு நடந்தே சென்ற புலம் பெயர்ந்த தொழிலாளர்களை காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி சந்தித்து பேசினார்.

புதுடெல்லி:

ஊரடங்கால் வெளிமாநிலங்களில் தங்கியுள்ள புலம்பெயர் தொழிலாளர்கள் வருமானம் இல்லாததால் சொந்த ஊர்களுக்கு சென்றவண்ணம் உள்ளனர். சரியான போக்குவரத்து வசதி இல்லாத நிலையில், நடைபயணமாகவோ அல்லது லாரிகள் மூலமாகவோ செல்லும்போது பல்வேறு இன்னல்களை சந்திக்கின்றனர்.

இதற்கிடையில், போதிய வேலைவாய்ப்பு மற்றும் வருமானம் இல்லாததால் தலைநகர் டெல்லியில் இருந்தும் ஆயிரக்கணக்கான புலர் பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கும் நடைபயணம் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், டெல்லியின் சுக்தேவ் விஹார் மேம்பால பகுதியில் இன்று நடந்து சென்று கொண்டிருந்த புலம்பெயர் தொழிலாளர்களை காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி சந்தித்தார். 

சாலை வழியாக நடந்தே தங்கள் சொந்த ஊரான உத்தர பிரதேச மாநிலத்திற்கு செல்வதாக அந்த தொழிலாளர்களில் ஒருவர் கூறினார். மேலும், புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர் செல்லும்போது அவர்கள் அடையும் இன்னல்களை ராகுல் காந்தி கேட்டறிந்து ஆறுதல் கூறினார்.

பின்னர் புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல கார் வசதியை ராகுல் காந்தி ஏற்பாடு செய்தனர். இதையடுத்து அவர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு காரில் புறப்பட்டு சென்றனர்.

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »