Press "Enter" to skip to content

சிறப்பு தொடர் வண்டிகளில் 24 கர்ப்பிணி பெண்களுக்கு குழந்தை பிறந்தது

சொந்த ஊர்களுக்கு சிறப்பு ரெயிலில் குடும்பத்தோடு பயணம் செய்த கர்ப்பிணி பெண்கள் 24 பேர் ரெயில்களில் குழந்தைகளை பெற்றெடுத்துள்ளனர்.

புதுடெல்லி:

நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் நள்ளிரவில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து அனைத்து மாநிலங்களிலும் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டதால் வெளி மாநிலங்களில் தங்கியிருந்து பணியாற்றி வந்த பல்வேறு மாநிலங்களை சேர்ந்தவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

சொந்த ஊர்களுக்கு செல்ல முடியாமல் தவித்து வந்த அவர்கள் தற்போது சிறப்பு ரெயில்கள் மூலமாக தங்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறார்கள்.

இப்படி பல்வேறு மாநிலங்களில் தங்கியிருந்து குடும்பத்தோடு பணியாற்றிய தொழிலாளர்கள் பலர் சிறப்பு ரெயில்கள் மூலமாக சொந்த ஊர்களுக்கு சென்று வருகிறார்கள்.

இப்படி சிறப்பு ரெயிலில் குடும்பத்தோடு பயணம் செய்த கர்ப்பிணி பெண்கள் 24 பேர் ரெயில்களிலேயே குழந்தைகளை பெற்றெடுத்துள்ளனர்.

பஞ்சாப்பில் இருந்து சிறப்பு ரெயிலில் சத்தீஸ்கருக்கு சென்ற பெண் ஒருவர் அழகான ஆண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார். இதே போன்று அகமதாபாத்தில் வேறு ஒரு சிறப்பு ரெயிலில் மதுகுமாரி என்ற 27 வயது பெண்ணுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.

இப்படி ரெயில்களில் குழந்தையை பெற்றெடுக்க கர்ப்பிணி பெண்களுக்கு ரெயிலில் பயணித்த மற்ற பெண்கள் உதவிகளை செய்துள்ளனர். கடந்த மே 1 மற்றும் 2 ஆகிய தேதிகளில் மட்டும் 16 குழந்தைகள் பிறந்துள்ளன.

குழந்தையை பெற்றெடுத்த பெண்களுக்கு உடனடியாக மருத்துவ பரிசோதனைகளும் செய்யப்பட்டுள்ளன. இதுபற்றி குழந்தைகளை பெற்றெடுத்த பெண்கள் கூறும்போது, ‘ஓடும் ரெயிலில் பிரசவமானது அதிர்ச்சி புதுவித அனுபவமாகவே இருந்தது’ என்று தெரிவித்தனர்.

ஓடும் ரெயிலில் தந்தையான கர்ப்பிணி பெண்களின் கணவன்மார்களும் குழந்தை பிறந்த மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள். சொந்த ஊருக்கு சென்ற பிறகே குழந்தை பிறக்கும் என்ற நம்பிக்கையில் இருந்ததாகவும், ஆனால் ரெயிலில் நல்லபடியாக குழந்தை பிறந்துவிட்டது என்றும் தெரிவித்தனர்.

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »