Press "Enter" to skip to content

மோடியின் ஓராண்டு கால ஆட்சியில் மக்கள் ஏமாற்றம்: காங்கிரஸ்

மோடியின் ஓராண்டு கால ஆட்சியில் மக்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்து இருப்பதாக காங்கிரஸ் கட்சி கூறி உள்ளது.

புதுடெல்லி:-

பிரதமர் மோடி இரண்டாவது முறையாக பதவி ஏற்று ஓராண்டு முடிந்துள்ள நிலையில் நேற்று முன்தினம் அவர் நாட்டு மக்களுக்கு எழுதிய கடிதத்தில், இந்தியா கடந்த ஓராண்டு காலத்தில் வேகமான முன்னேற்றத்தை கண்டுள்ளதாக கூறி இருந்தார்.

இந்த நிலையில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால், தகவல் தொடர்பு பிரிவின் பொறுப்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா ஆகியோர் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

கடந்த 6 ஆண்டுகால பாரதீய ஜனதா ஆட்சியில் மக்களின் கவனத்தை திசை திருப்புவதும் வெற்றுக்கூச்சல் எழுப்புவதும்தான் நடந்து உள்ளது. இதுதான் மோடி அரசின் நிர்வாக பாணியாக இருந்து வருகிறது. திறமையற்ற இந்த ஆட்சியால் மக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

மோடியின் இரண்டாவது ஆட்சி காலத்தின் முதல் ஆண்டு நிறைவு பெற்று இருக்கிறது. இந்த ஓராண்டில் மக்கள் மிகுந்த ஏமாற்றத்தையும், வேதனையையும் சந்தித்து உள்ளனர். இதயமற்ற அரசாங்கத்தால் மக்கள் ஆதரவற்ற நிலையில் இருக்கிறார்கள்.

ஆட்சிக்கு வரும் முன் மோடி ஏராளமான வாக்குறுதிகளை அளித்து, மக்களிடம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தினார். ஆனால் செய்தது என்னவோ மிகவும் குறைவுதான்.

ஆட்சிக்கு வந்தபோது ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்குவோம் என்று வாக்குறுதி அளித்தார். ஆனால் கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 2017-2018-ம் ஆண்டில் இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் மிகவும் அதிகரித்தது. நாடு விடுதலை அடைந்த பிறகு உள்நாட்டு மொத்த உற்பத்தி வெகுவாக குறைந்து இருக்கிறது.

இந்த ஆட்சியில் பணக்காரர்கள் மேலும் பணக்காரர்கள் ஆகிறார்கள். ஏழைகளும், அடிமட்டத்தில் உள்ளவர்களும் ஆதவற்ற நிலையில் இருக்கிறார்கள். 73 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வருவாய் சமத்துவமின்மை நிலவுகிறது. புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் அனுபவிக்கும் துயரங்கள் மோடி தலைமையின் தோல்வியை காட்டுகிறது.

விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாகும் என்று கூறினார். ஆனால் இந்த ஆண்டு குறுவை பருவத்தில் மட்டும் விவசாயிகளுக்கு ரூ.50 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டு உள்ளது. 6 ஆண்டுகால ஆட்சியில் மத, பிரிவினைவாத வன்முறைகள் அதிகரித்து இருக்கின்றன. சுயலாபத்துக்காக நாட்டின் நலன் தியாகம் செய்யப்படுகிறது. கடந்த 6 ஆண்டுகளில் ராணுவ வீரர்கள் அதிக அளவில் உயிர்த்தியாகம் செய்து இருக்கிறார்கள்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »