Press "Enter" to skip to content

விஜய் மல்லையாவை நாடு கடத்துவதில் சட்டச்சிக்கல் இருப்பதால் தாமதம் – இங்கிலாந்து அரசு

விஜய் மல்லையாவை நாடு கடத்துவதில் சட்ட சிக்கல் இருப்பதாக இங்கிலாந்து அரசு தெரிவித்துள்ளது.

லண்டன்:

பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா, பொதுத்துறை வங்கிகளில் வாங்கிய ரூ.9 ஆயிரம் கோடி கடனை திருப்பி செலுத்தாமல், கடந்த 2016-ம் ஆண்டு மார்ச் மாதம் லண்டனுக்கு தப்பிச் சென்றார்.

அவரை நாடு கடத்துமாறு இந்தியா விடுத்த வேண்டுகோளின்பேரில், கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் அவர் கைது செய்யப்பட்டார். ஜாமீனில் இருந்து வரும் அவர், பல்வேறு கட்டங்களாக மேல் முறையீடு செய்தார். அவை அனைத்தும் தள்ளுபடியானது. இதையடுத்து, அவரை நேற்று நாடு கடத்தி கொண்டுவரப்பட்டு, மும்பை சிறையில் அடைக்கப்படுவதாக இருந்தது.

இந்நிலையில், விஜய் மல்லையாவை நாடு கடத்துவதில் சட்டச்சிக்கல் இருப்பதால் தாமதம் ஏற்பட்டுள்ளதாக இங்கிலாந்து அரசு தெரிவிதுள்ளது.

இதுதொடர்பாக, இங்கிலாந்து உயர் ஆணைய செய்தித்தொடர்பாளர் கூறுகையில், விஜய் மல்லையாவை நாடு கடத்துவதில் சட்டச் சிக்கல் இருக்கிறது. அதற்கு தீர்வு கண்டால்தான், அவரை நாடு கடத்தும் ஏற்பாடுகளைச் செய்ய முடியும். இங்கிலாந்து சட்டப்படி, இதற்கு தீர்வு காணாமல் அவரை நாடு கடத்த முடியாது. இதற்கு எவ்வளவு காலம் ஆகும் என்று சொல்ல முடியாது. இருப்பினும், கூடிய விரைவில் தீர்வு காண முயன்று வருகிறோம் என்றார்.

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »