Press "Enter" to skip to content

ஜெ.அன்பழகனின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம்- மருத்துவர் தகவல்

திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகனின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தனியார் மருத்துவமனை மருத்துவர் தெரிவித்துள்ளார்.

சென்னை:

திமுக எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் மூச்சுத்திணறல் காரணமாக குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கொரோனா பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.

இதனையடுத்து, அவரை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து மருத்துவர்கள் கண்காணித்து வருகின்றனர். அவருக்கு மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதால் வென்டிலேட்டர் பொருத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் உடல்நிலை குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தொலைபேசி மூலம் கேட்டறிந்தார்.

தனியார் மருத்துவமனை மருத்துவரிடம் தொலைபேசி மூலம் ஜெ.அன்பழகனின் உடல்நலம் குறித்து கேட்டறிந்த முதலமைச்சர் அரசு சார்பில் அனைத்து உதவிகளும் செய்யப்படும் எனவும் தெரிவித்தார்.

இதையடுத்து, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மருத்துவமனைக்கு நேரில் சென்று ஜெ.அன்பழகன் உடல்நிலை குறித்து மருத்துவரிடம் கேட்டறிந்தார்.

முன்னதாக ஜெ.அன்பழகன் விரைவில் குணமடைய இறைவனை வேண்டிக்கொள்வதாகவும் முதலமைச்சர் ட்விட்டரில் பதிவிட்டு இருந்தார்.

இந்த நிலையில் ஜெ.அன்பழகன் உடல்நிலை குறித்து தனியார் மருத்துவமனை மருத்துவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ஜெ.அன்பழகனின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. பொதுமக்கள் வதந்திகளை நம்ப வேண்டாம்.

வென்டிலேட்டர் மூலம் ஆக்சிஜன் தேவை 90 சதவீதமாக இருந்த நிலையில் 45 சதவீதமாக குறைந்துள்ளது.

மேலும் அனைத்து வித உதவிகளையும் வழங்குவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது என தெரிவித்தார்.

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »