சிவில் சர்வீஸ் முதல் நிலைத் தேர்வு அக்டோபர் 4-ம் தேதி நடைபெறும் என யு.பி.எஸ்.சி அறிவித்துள்ளது.
புதுடெல்லி:
நாட்டில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எப்.எஸ்., உள்ளிட்ட அதிகாரிகளை தேர்ந்தெடுப்பதற்காக மத்திய பணியாளர் தேர்வாணையம் யு.பி.எஸ்.சி. ஆண்டுதோறும் தேர்வுகளை நடத்தி வருகிறது.
இந்த ஆண்டு சிவில் சர்வீசஸ் பணிகளுக்கான முதல் நிலை தேர்வு (பிரிலிமினரி) மே மாதம் 30-ம் தேதி நடப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த தேர்வுக்காக 9 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தயாராகி வந்தனர்.
இதற்கிடையே, கொரோனா வைரஸ் நோய் பரவாமல் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் இந்த தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டது.
இந்நிலையில் மத்திய பணியாளர் தேர்வாணையம் ஒரு சிறப்புக் கூட்டத்தை நடத்தியது. சிறப்பு கூட்டம் முடிந்த பின்னர் வெளியிடப்பட்ட அறிவிப்பில் கூறியுள்ளதாவது:
இந்த ஆண்டுக்கான ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ், ஐ.எப்.எஸ் உள்ளிட்ட சிவில் தேர்வுகளுக்கு விண்ணப்பித்து மே 31 முதல் நிலைத் தேர்வு தள்ளிவைக்கப்பட்ட நிலையில் தேர்வுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
முதல்நிலைத் தேர்வு 2020- அக்டோபர் அக்டோபர் 4-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) அன்று ஒரே நாளில் நடைபெறுகிறது.
முதல் நிலைத் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கான முதன்மைத் தேர்வு 2021-ம் ஆண்டு ஜனவரி 8-ம் தேதி வெள்ளிக்கிழமை தொடங்கி 5 நாட்கள் நடக்கிறது.
ஏற்கனவே, 2019-ம் ஆண்டுக்கான முதன்மைத் தேர்வு எழுதி தேர்வானவர்களுக்கான நேர்முகத் தேர்வு 2020-ம் ஆண்டு ஜூலை 20 அன்று நடக்கிறது.
இதற்கான அழைப்பு மாணவர்களுக்கு தனித்தனியே அனுப்பி வைக்கப்படும். மேற்கண்ட தேர்வுத் தேதிகள் சூழ்நிலையைப் பொறுத்து மாற்றத்துக்கு உட்பட்டவை என தெரிவித்துள்ளது.
Related Tags :
Source: Maalaimalar