Press "Enter" to skip to content

கொரோனா தொற்றை தடுக்க கடைகள் எப்படி செயல்பட வேண்டும்?- தமிழக அரசு உத்தரவு

தமிழகத்தில் கடைகள் மற்றும் பல்வேறு நிறுவனங்கள் எப்படி செயல்பட வேண்டும்? என்பதற்காக வகுத்துள்ள செயல்பாட்டு முறைகளை அரசு வெளியிட்டுள்ளது.

சென்னை:

தமிழக அரசின் தலைமை செயலாளர் கே.சண்முகம் வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தமிழகத்தில் கடைகள் மற்றும் பல்வேறு நிறுவனங்கள் இயங்குவதற்காக அரசு வகுத்துள்ள செயல்பாட்டு முறைகள் வருமாறு:-

* கடையின் நுழைவுவாயிலில் சோப்பு, தண்ணீர் அல்லது சானிடைசர் வைக்கப்பட்டு இருக்க வேண்டும். கடைக்கு முன்பு 2 மீட்டர் இடைவெளியில் குறியீட்டு அடையாளம் இடப்பட வேண்டும்.

* கடை உரிமையாளர், தொழிலாளி முககவசம், கையுறை அணிவதோடு, மூக்கு, கண், வாயை தொடுவதை தவிர்க்க வேண்டும். கடைக்குள் ஒரு வாடிக்கையாளர் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும். 4 அல்லது 5 பேர் வெளியே குறிக்கப்பட்ட இடத்தில் காத்திருக்க வேண்டும்.

* காற்றோட்டத்துக்காக ஜன்னல்கள் அனைத்தும் திறந்து வைக்கப்பட வேண்டும். சமூக இடைவெளி, முககவசத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தும் விளம்பர பலகையை (3-க்கு 3 அடி) கடை முன்பு வைக்க வேண்டும்.

* கைப்பிடிகள், மேஜைகள் போன்ற அடிக்கடி தொடக்கூடிய பகுதிகளை கிருமிநாசினி கொண்டு நாளுக்கு 10 முறை சுத்தம் செய்யப்பட வேண்டும். கடை ஊழியர்களும் விழிப்புணர்வோடு தகுந்த பாதுகாப்புடன் செயல்பட வேண்டும்.

* இருமல், சளி, காய்ச்சல் உள்ள கடை பணியாளர்கள் வீட்டில் இருக்க வேண்டும். மருத்துவரிடம் தங்களை காண்பித்து பரிசோதனை செய்து 7 நாட்கள் தனிமைப்பட வேண்டும்.

* இருமல், சளி, காய்ச்சல் உள்ள வாடிக்கையாளர்களை கடைக்குள் அனுமதிக்க கூடாது. கடைக்குள் நுழையும் முன்பும், வெளியேறும் போதும் அனைவரும் கைகழுவ வேண்டும். முககவசம் இல்லாத வாடிக்கையாளரை பொருள் வாங்க அனுமதிக்கக் கூடாது.

* தேவையில்லாமல் கடையில் எந்த பொருளையும் வாடிக்கையாளர்கள் தொட வேண்டாம். வீட்டுக்குள் நுழைவதற்கு முன்பு கைகளை நன்றாக மீண்டும் கழுவ வேண்டாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »