Press "Enter" to skip to content

ஓபிசி பிரிவினருக்கு 50 சதவீத இடஒதுக்கீடு- மத்திய அரசு பதில் அளிக்க சென்னை உயர்நீதிநீதி மன்றம் உத்தரவு

மருத்துவப் படிப்புகளுக்கான மத்திய தொகுப்பு இடங்களில் ஓபிசி பிரிவினருக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பான வழக்கில் மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்யும்படி சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

சென்னை:

தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவ பட்டப்படிப்புகளில் 15 சதவீத இடங்களும், மருத்துவ மேற்படிப்புகளில் 50 சதவீத இடங்களும் அகில இந்திய ஒதுக்கீட்டுக்காக மத்திய தொகுப்புக்கு வழங்கப்படுகிறது.

இவ்வாறு மத்திய தொகுப்புக்கு வழங்கப்படும் இடங்களில் பிற்பட்ட மற்றும் மிகவும் பிற்பட்ட வகுப்பினர் அடங்கிய இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்க உத்தரவிடக் கோரி அதிமுக, திமுக, பாமக, மதிமுக உள்ளிட்ட கட்சிகள் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தன. இவ்வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகும்படி அறிவுறுத்தியது. அதன்படி அதிமுக, திமுக, பாமக, மதிமுக உள்ளிட்ட கட்சிகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளன.

தற்போது மருத்துவ மேற்படிப்புகளுக்கான கலந்தாய்வு நடந்து வருவதால் திமுக சார்பில் தொடரப்பட்ட வழக்கை அவசர வழக்காக விசாரிக்கக் கோரி நீதிபதிகள் ஆர்.சுப்பையா,கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் அடங்கிய அமர்வில் மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் முறையீடு செய்தார். இதேபோல் பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி சார்பில் தொடரப்பட்ட வழக்கையும் உடனடியாக விசாரணைக்கு எடுக்க வேண்டும் என வழக்கறிஞர் கே.பாலு முறையீடு செய்தார்.

இந்த முறையீடுகளை ஏற்ற நீதிபதிகள், இடஒதுக்கீடு கோரி தொடரப்பட்ட வழக்குகளை 16-ம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக தெரிவித்தனர்.

இந்நிலையில், ஓபிசி பிரிவினருக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்கக்கோரும் வழக்கு  இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மருத்துவ படிப்புகளில் ஓபிசி பிரிவினருக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் வரை மருத்துவக் கலந்தாய்வை நடத்த அனுமதிக்கக்கூடாது என அதிமுக தரப்பில் வாதிடப்பட்டது.

தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்கள் எதிர்மனுதாரர்களாக சேர்க்கப்படவில்லை என மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, ஓபிசி இடஒதுக்கீடு தொடர்பான மனுவிற்கு 22ம் தேதிக்குள் பதில் அளிக்கும்படி மத்திய அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களை எதிர்மனுதாரர்களாக சேர்க்கும்படி உத்தரவிட்டு, விசாரணையை திங்கட்கிழமைக்கு ஒத்திவைத்தனர்.

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »