பீகார் மாநிலத்தில் நேற்று இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்ததில், மின்னல் தாக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 93 ஆக உயர்ந்துள்ளது.
பாட்னா:
தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், உத்தர பிரதேசம், பீகாரில் கடந்த ஓரிரு தினங்களாக இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி உள்ளது. முக்கிய சாலைகளில் மழைநீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடுகிறது. பீகாரில் மட்டும் இடி மின்னல் தாக்கி 83 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதற்கிடையே, இடி மின்னல் தாக்கி உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு முதல் மந்திரி நிதிஷ் குமார் இரங்கல் தெரிவித்தார். மேலும், அவர்களது குடும்பத்தினருக்கு தலா ரூ. 4 லட்சம் வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.
இந்நிலையில், பீகார் மாநிலத்தில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்ததில் மின்னல் தாக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 93 ஆக அதிகரித்துள்ளது என அம்மாநில பேரிடர் மேலாண்மை துறை மந்திரி லக்ஷ்மேஷ்வர் ராய் தெரிவித்துள்ளார்.
அசாம், மேகாலயா மற்றும் பீகார் மாநிலங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ள நிலையில், அங்கு தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.
Related Tags :
Source: Maalaimalar