சாத்தான்குளம் வழக்கை மக்கள் மறந்துவிடுவார்கள் என காத்திராமல் நீதியை காக்க வேண்டும் என முதல்வருக்கு கமல் ஹாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சென்னை:
சாத்தான்குளத்தில் தந்தை, மகன் போலீசாரால் அடித்துக் கொல்லப்பட்டதாக கூறப்படும் வழக்கின் விசாரணையை சிபிஐ வசம் ஒப்படைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இது கொள்கை முடிவு என்பதால், நீதிமன்றம் தலையிட முடியாது என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை கூறி உள்ளது. எனவே, இந்த வழக்கு விரைவில் சிபிஐ வசம் ஒப்படைக்கப்படலாம் என தெரிகிறது.
ஆனால், அரசின் இந்த முடிவிற்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவு வருமாறு:-
சாத்தான்குளம் வழக்கை சிபிஐ-க்கு மாற்றி, பொறுப்பை தட்டி கழிக்காதீர்கள் முதல்வரே! குற்றவாளிகள் மேல் ஐபிசி 302 கீழ் வழக்குப் பதிவு செய்து, அவர்களை புலனாய்வுத் துறையிடம் ஒப்படையுங்கள்.
சிபிஐ விசாரணைக்காக மாற்றப்பட்டு, கிடப்பில் இருக்கும் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு, குட்கா ஊழல் போன்ற வழக்குகளின் வரிசையில் இதையும் சேர்த்து, மக்கள் மறந்து விடுவார்கள் என காத்திராமல், நீதியைக் காத்திடுங்கள். காலம் தாழ்த்தப்பட்ட நீதி, அநீதி.
இவ்வாறு கமல் கூறி உள்ளார்.
Related Tags :
Source: Maalaimalar