Press "Enter" to skip to content

உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியில் கட்டணமின்றி செல்லும் வாகனங்கள்

உளுந்தூர்பேட்டை அருகே 7 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் செங்குறிச்சி சுங்கச்சாவடியில் வாகனங்கள் அனைத்தும் கட்டணம் செலுத்தாமல் செல்கின்றன.

உளுந்தூர்பேட்டை:

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. இந்த நிலையில் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள செங்குறிச்சி சுங்கச்சாவடியில் பணியாற்றி வரும் 7 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து தமிழ்நாடு சுங்கச்சாவடி பணியாளர்கள் சங்க மாநில பொதுச்செயலாளர் காரல் மார்க்ஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில் சுங்கச்சாவடி ஊழியர்களுக்கு பாதுகாப்பு குறைவாக உள்ளது. எனவே செங்குறிச்சி சுங்கச்சாவடி ஊழியர்களுக்கு உடனடியாக கொரோனா பரிசோதனை செய்யப்பட வேண்டும். மேலும் சுங்கச்சாவடியை இயக்கக்கூடாது என்றும் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் உளுந்தூர்பேட்டை தாசில்தார் காதர் அலி, சுங்கச்சாவடி நிர்வாகத்திற்கு நோட்டீஸ் ஒன்றை அனுப்பினார். அதில் ஊழியர்களின் நலன் கருதி வருகிற 20-ந்தேதி வரை சுங்கச்சாவடியை இயக்கக்கூடாது. ஊழியர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும். அவர்களுக்கு தொற்று இல்லை என முடிவு வந்த பிறகு சுங்கச்சாவடியை இயக்கலாம் என தெரிவித்திருந்தார்.

இதையடுத்து நேற்று மதியம் 2.30 மணியளவில் சுங்கச்சாவடி ஊழியர்கள் அனைவரும் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதனால் சென்னை-திருச்சி, திருச்சி-சென்னை மார்க்கமாக செல்லும் வாகனங்கள் அனைத்தும் கட்டணம் செலுத்தாமல் செல்கின்றன.

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »