அசாமில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி இதுவரை 105 பேர் உயிரிழந்துள்ளனர்.
கவுகாத்தி:
அசாம் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பருவமழை தீவிரமடைந்து வருகிறது. கனமழை காரணமாக பிரமபுத்திரா மற்றும் அதன் கிளை நதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதனால் மாநிலத்தில் மொத்தம் உள்ள 33 மாவட்டங்களில் 26 மாவட்டங்களில் வெள்ளத்தில் மூழ்கின. 30 லட்சத்துக்கும் அதிகமானோர் வெள்ளப்பெருக்கு காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
லட்சக்கணக்கான வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. சாலைகள், பாலங்கள் என அனைத்தும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுள்ளது. பல்லாயிரக்கணக்கான ஹேக்டர் நிலப்பரப்பில் பயிரிடப்பட்டிருந்த பயிர்கள் வெள்ள நீரில் மூழ்கி நாசமாகின.
காசிரங்கா தேசிய பூங்கா வெள்ளத்தால் நீரில் மூழ்கியது. வெள்ளத்தால் ஆயிரக்கணக்கான வனவிலங்குகள் தங்கள் வாழ்விடங்களை விட்டு மக்கள் வசிக்கும் குடியிருப்புகளுக்குள் தஞ்சம் அடைந்தன.
இந்நிலையில், அசாமில் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி இதுவரை 105 பேர் உயிரிழந்துள்ளதாக அம்மாநில பேரிடர் மேலாண்மை துறை தெரிவித்துள்ளது.
Related Tags :
Source: Maalaimalar