புதுச்சேரி என்.ஆர்.காங். எம்எல்ஏ ஜெயபாலுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதையடுத்து அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
புதுச்சேரி:
புதுச்சேரியில் புதிதாக 97 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. கொரோனாவுக்கு மூதாட்டி ஒருவர் உயிரிழந்தார். இதனால் கொரோனா தொற்றால் பாதித்தோர் எண்ணிக்கை 2,513 ஆகவும், பலி எண்ணிக்கை 35 ஆகவும் உயர்ந்துள்ளது.
புதுவை மாநிலத்தில் நேற்று 647 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. இதில் புதுச்சேரியில் 95 பேர், காரைக்கால், மாகியில் தலா ஒருவர் என மொத்தம் 97 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதுவரை மொத்தம் 2,513 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நேற்று கதிர்காமம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 47 பேர், ஜிப்மரில் 20 பேர், கொரோனா கேர் சென்டரில் 15 பேர், காரைக்காலில் ஒருவர் என மொத்தம் 83 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். மாநிலத்தில் இதுவரை 33,658 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. 312 பேரின் பரிசோதனை முடிவுகள் காத்திருப்பில் உள்ளன.
இந்நிலையில் கதிர்காமம் தொகுதி என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஜெயபாலுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் இந்திராகாந்தி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
புதுச்சேரி சட்டசபை கூட்டத்தொடரில் 3 நாட்கள் பேரவை நிகழ்வுகளில் ஜெயபால் கலந்துகொண்டுள்ளார்.
ஒரு எம்எல்ஏவுக்கு கொரோனா உறுதியானதால் புதுச்சேரி பேரவை கூட்டம் இன்று நடக்குமா என்பது கேள்விக்குறியாகி உள்ளது.
Related Tags :
Source: Maalaimalar